×

தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்

 

கோவை,ஏப்.7: கோவை மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நாளில் வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவன உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று நடந்தது. இதில், கோவை, கூடுதல் தொழிலாளர் கமிஷனர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 9-ம் தேதியும், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23-ம் தேதியும், மேற்கு வங்காளம் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23 மற்றும் 29-ம் தேதியும் நடக்க இருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்கும் வகையில், அன்றைய தினம் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் கோவை மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, தொழிலாளர்கள் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக 0422-2241136 என்ற எண்ணிலும், உதவி இயக்குனர் சுபாஷ் சந்திரன் 82206-13777, இணை ஆய்வாளர்கள் குருபிரசாத் 95008-97708, வெங்கடராமன் 98433-71977 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Coimbatore ,Coimbatore district… ,
× RELATED மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி