வேறொருவருடன் மனைவி ஓட்டம் தனியாக வாழ முடியாது என கால்களை வெட்டிக்கொண்ட கணவர்: ஆந்திராவில் சோகம்

 

திருமலை: மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால் தனியாக வாழ முடியாது என மன வேதனை அடைந்த கணவர், கால்களை வெட்டிக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம், சிந்தாமணி தாலுகா, நாராயணஹள்ளியைச் சேர்ந்தவர் ராமுலு(35). இவரது மனைவி பவித்ரா(30). இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் பவித்ரா சில நாட்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டாராம். இதையறிந்த ராமுலு அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் நடத்தையால் தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதே என்று மனவேதனை அடைந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளியில் உள்ள தன் சகோதரி சித்தம்மாவின் வீட்டிற்கு வந்தார்.

சகோதரியிடம் மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டாள். அவள் இன்றி என்னால் தனியாக வாழ முடியாது எனக்கூறி கதறி அழுதார். அவருக்கு அவரது சகோதரி ஆறுதல் கூறியுள்ளார். இந்நிலையில் அருகே உள்ள மதீனகொண்டா காட்டிற்கு சென்ற அவர் அங்கு மதுபானம் குடித்துள்ளார். பின்னர் விரக்தியில் கத்தியால் தனது இடது காலை வெட்டிக்கொண்டாராம். அதிக ரத்தப்போக்கால் ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் கதறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர், அவரை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: