எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட தலைமை தேர்தல் கமிஷனர் பதவி நீக்க தீர்மானம் தள்ளுபடி: நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு

 

புதுடெல்லி: பீகார் தேர்தலை தொடர்ந்து நாடு முழுவதும் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்தன. இந்த பணியில் பாரபட்சம், தேர்தல் மோசடி புகார்கள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் அளித்தனர். தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் மற்றும் முறைகேடு புகார்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவில் 130 மக்களவை மற்றும் 63 மாநிலங்களவை உறுப்பினர்கள் (சுமார் 193 எம்.பி.க்கள்) கையெழுத்திட்டனர்.

எம்பிக்கள் சார்பில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட நோட்டீசை நாடாளுமன்ற செயலகங்கள் ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டது. இது போன்ற பதவி நீக்க தீர்மான நடவடிக்கை தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக வரலாற்றில் முதல்முறையாக கொண்டுவரப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பதவி நீக்க ேநாட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்து உள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் நோட்டீசை நிராகரித்து உள்ளனர். அந்த அறிவிப்பில்,’தீர்மான அறிவிப்பை உரிய முறையில் பரிசீலித்த பிறகும், அதில் உள்ள அனைத்து தொடர்புடைய அம்சங்கள் மற்றும் சிக்கல்களைக் கவனமாகவும், நடுநிலையாகவும் மதிப்பிட்ட பிறகு, அவைத்தலைவர் தீர்மான அறிவிப்பை ஏற்க மறுத்துள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: