புதுச்சேரி: புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் வருகிற 9ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மொத்தம் 294 வேட்பாளர்கள் உள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு மற்றும் தேஜ கூட்டணி இடையே இருமுனை போட்டி நிலவும் நிலையில், தேர்தல் பிரசாரம் நாளை (7ம்தேதி) மாலை 6 மணியுடன் ஓயும் நிலையில் முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள் புதுச்சேரிக்கு படையெடுத்து தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உச்சகட்ட அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி, விஜய் ரோடுஷோ நடத்திவிட்டு சென்ற நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, பாஜ தேசிய தலைவர் நிதின் நிபின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு திரட்டி விட்டுச் சென்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி இன்று காலை இசிஆர் நவீன மீன்அங்காடி அருகே உள்ள திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
தட்டாஞ்சாவடியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். அதேபோல் திருக்கனூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதேபோல் நாதக சீமானும் 5 இடங்களில் திறந்த வேனில் பிரசாரம் செய்கிறார். தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (7ம்தேதி) மரப்பாலம் சந்திப்பு, வில்லியனூர் கிழக்கு சன்னதி வீதி, அண்ணா சாலை ஆகிய இடங்களில் ரோடுஷோ நடத்தி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.புதுச்சேரியில் 9ம்தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. மே 4ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே தேர்தலுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.
