×

வளைகுடா நாடுகளில் போர் தீவிரம்; குவைத், அமீரகம் பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்: மின்சாரம், குடிநீர் நிலையங்கள், கெமிக்கல் ஆலை சேதம்

குவைத் சிட்டி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், அங்கு பதற்றம் நீடிக்கிறது. ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் ஈரானின் முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தனது தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வந்தது.

இந்நிலையில், இன்று குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலமாகப் பயங்கரத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குவைத் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நள்ளிரவு முதல் அதிகாலை வரை தங்களது வான் எல்லைக்குள் நுழைந்த எதிரி நாட்டு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வான் பாதுகாப்புப் படை தடுத்து அழித்தது. இருப்பினும், ஈரானிய ட்ரோன் ஒன்று குவைத்தின் சுவைக் எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தைத் தாக்கியதில், குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தலைமையகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மேலும், மின்சாரம் மற்றும் குடிநீர் நிலையங்கள் சேதமடைந்ததால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகமும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகளின் சிதறல்கள் அபுதாபியில் உள்ள போரூஜ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது விழுந்ததில் அங்கேயும் தீ விபத்து ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சேதங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஈரானின் ராணுவ ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாதி கூறுகையில், ‘ஈரானின் இலக்குகள் தாக்கப்பட்டால், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ சொத்துக்கள் மீதும் அழிவுகரமான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Gulf ,Iran ,Kuwait ,Emirate Bahrain ,Kuwait City ,Middle East ,Strait of Hormuz ,
× RELATED அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பொறுப்பற்ற...