அதிமுக-வில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு தவெக-வில் தஞ்சம் புகுந்த மாஜி அமைச்சர் செங்கோட்டையன், தவெக-வின் சின்னமான விசிலை அடித்தால் குழந்தைகளுக்கு சளி பிரச்சனை சரியாகி விடும் என்று ஒரு டாக்டர் ரேஞ்சிற்கு பேசியிருப்பது மக்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கடும் கேலிக்குள்ளாகி இருக்கிறது.
திருச்செங்கோடு தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் கோபிச்செட்டிபாளையம் தொகுதி வேட்பாளரான செங்கோட்டையன், தனது கட்சியின் விசில் சின்னம் குறித்து பிரச்சாரம் செய்யும் போது “விசில் ஊதினால் சளி பிரச்சனை சரியாகும்” என்று பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் மட்டுமல்ல பொதுவெளியிலும் சர்ச்சையையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
பிரச்சார கூட்டத்தில் அவர் பேசியதாவது,” சிறு குழந்தைக்கு சளி பிடித்திருந்தால், அவர்கள் விசில் ஊதினால் போதும். சளி பிரச்சனை நின்று போய்விடும். அதே போல வயது முதிர்ந்தவர்கள் விசில் அடித்தால், அது அவர்களின் இதயம் நன்றாக வேலை செய்ய உதவும் என்றும், அது அவர்களுக்கு ஆரோக்கியமான மூச்சுப் பயிற்சி போல செயல்படும். எனவே நல்ல பெரிய விசிலை கொடுத்து அடித்தால் அது அவர்களின் ஹார்ட் நன்கு பம்பிங்காக உதவும்” என்றும் குறிப்பிட்டார்.
விசில் சின்னத்தின் மூலம் ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டு வருவோம் என தனது மேதாவித்தனமான கண்டுபிடிப்பை அவர் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார். அறிவியல் பூர்வமற்ற, மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படாத இத்தகைய கருத்துக்களை ஒரு வேட்பாளர் பிரச்சாரத்தில் பேசுவது சரியா என்ற விவாதத்தை மற்றும் சமூக வலைத்தளங்களில் சிரிப்பலையையும் செங்கோட்டையனின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கேலிக்குரிய மற்றும் சர்ச்சை கருத்துக்களால், விஜய் தலைமையிலான தவெக-வின் தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.
