×

காடையாம்பட்டி அருகே டூவீலர் மீது லாரி மோதி விவசாயி பலி

*உறவினர்கள் மறியலால் பரபரப்பு

காடையாம்பட்டி : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த வேப்பிலை ஊராட்சியைச் சேர்ந்தவர் சந்தனகுமார்(45). விவசாயியான இவரது மனைவி, பல ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை 5 மணியளவில், சந்தனகுமார் அம்மனேரி பேருந்து நிறுத்தம் அருகே, தனது டூவீலரில் காடையாம்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது வே.கொங்கரப்பட்டியில் உள்ள ஜல்லி கிரஷர் ஆலையில் இருந்து ஜல்லி லோடு ஏற்றிய லாரி, காடையாம்பட்டி நோக்கி வந்தது.

அந்த லாரி சந்தனகுமார் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்த சந்தனகுமார் தலை மீது, டிப்பர் லாரியின் முன்சக்கரம் ஏறியதால், தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், சந்தனகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை சிறைபிடித்து, டிரைவரை கைது செய்யக்கோரி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார், தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சந்தன குமாரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரேத பரிசோதனைக்கு சந்தனகுமாரின் உடலை எடுத்து செல்ல அனுமதிக்க முடியாது என உறவினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்குபதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனால் சமாதானம் அடைந்த உறவினர்கள், போராட்டத்தை கைவிட்டு, சந்தனகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஒப்புக்கொண்டனர்.

Tags : Kadaiyampatti ,Chandanakumar ,Veppilai Panchayat ,Salem district ,Chandanakumar… ,
× RELATED தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக்...