சென்னை: தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? என பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; தமிழ்நாட்டுக்கு வரும் ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களும் & பா.ஜ.க. முதலமைச்சர்களும் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்வார்களா?
* தமிழ்மண்ணில் நின்று, “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?
* நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டுக்குத் தருவது எவ்வளவு? பா.ஜ.க.வால் ஆளப்படும் செல்லக்குழந்தை மாநிலங்களுக்குத் தருவது எவ்வளவு? வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
* கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் FCRA சட்டத்திருத்தத்தை முழுமையாகத் திரும்பப் பெறுவீர்களா அல்லது அடுத்த வாரமே நிறைவேற்றப் போகிறீர்களா?
* இவற்றுக்கெல்லாம், பழனிசாமி அவர்களால் தனது டெல்லி ஓனர்களிடம் பதில்பெற்றுத் தர முடியுமா?
* கண்ணியமற்ற அவதூறுகளை வாந்தி எடுப்பதை விடுத்து, மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சினைகளை எப்போதுதான் பேசுவீர்கள்?
தமிழ்நாட்டைத் துண்டாட எத்தனை பேர் டெல்லியில் இருந்து படையெடுத்து வந்தாலும், தமிழ்நாடு தலைகுனியாது. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று கூறினார்.
