வேலூர், ஏப்.6: வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து குளிர்ச்சியைத் தந்தாலும், நேற்று காலை முதல் வெயிலின் தீவிரமடைந்தது. நேற்றைய நிலவரப்படி வேலூரில் அதிகபட்ச வெப்பநிலையாக 103.6 டிகிரி பதிவாகியுள்ளது. பொதுமக்கள் கடும் புழுக்கத்தை உணர்ந்தனர். மதிய வேளையில் வீசிய அனல் காற்றால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக வேலூர் பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை மற்றும் கோட்டை சுற்றுச்சாலையில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசணி மற்றும் குளிர்பானங்களை நாடிச் செல்கின்றனர். வானிலை ஆய்வு மையத் தகவலின்படி, வெப்பச்சலனம் காரணமாக வரும் நாட்களில் மாலை நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருந்தாலும், பகல் நேர வெப்பநிலை 100 டிகிரியை கடந்தே நீடிக்கும் எனத் தெரிகிறது. எனவே, பொதுமக்கள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
