×

தந்தையை காலி செய்ய காசை அள்ளி வீசும் மகன்; ராமதாஸ் வேட்பாளர் அன்புமணியிடம் சரண்: கட்சியில்இருந்து அதிரடியாக நீக்கம்

* சின்னம்மாவுக்கும் டாட்டா காட்டுவதால் கலகலத்த கூட்டணி

பாமகவில் தந்தை, மகன் மோதலால் கட்சி இரண்டாக உடைந்து ராமதாஸ் தலைமையிலான பாமகவும், அன்புமணி தலைமையிலான பாமகவும் தனித்தனியாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. அன்புமணி தரப்பு அதிமுக, பாஜ உடன் கூட்டணி அமைத்தும், ராமதாஸ் தரப்பு சசிகலாவுடன் கூட்டணி அமைத்தும் தேர்தலை சந்திக்கிறது. அன்புமணிக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால், ராமதாஸ் தரப்பில் தற்போது வரை 5 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

ஆனால் பலமான கூட்டணி இல்லாததாலும், தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்காததாலும் போட்டியிட வேட்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாகவே தைலாபுரம் தோட்டத்திற்கு செல்வதை ராமதாஸ் நிர்வாகிகள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ராமதாஸ் நிர்வாகிகளை தேடி பிடித்து வேட்பாளர்களாக அறிவித்து வருகிறார். குறிப்பாக அன்புமணி பாமக போட்டியிடும் தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களை களம் இறக்கி வருகிறது.

மருமகள் சவுமியா போட்டியிடும் தொகுதி மற்றும் சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி, விக்கிரவாண்டி தொகுதிகளிலும் அன்புமணி பாமக வேட்பாளருக்கு எதிராக ராமதாஸ் போட்டி வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளார். அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பில் புகழேந்தி வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி மறுநாளே (நேற்று) சென்னையில் அன்புமணியை சந்தித்து அவரிடம் சரணடைந்தார்.

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘தேர்தலில் போட்டியிட சீட்டே கேட்காதவர்களை ராமதாஸ் வேட்பாளராக அறிவித்து வருகிறார். விக்கிரவாண்டி தொகுதிக்கு புகழேந்தி விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் ராமதாஸ் வலுக்கட்டாயமாக வேட்பாளராக அறிவித்திருக்கிறார். தேர்தல் செலவுக்கு பணமும் கொடுக்கவில்லை. இதனால் எப்படி போட்டியிட முடியும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். ராமதாஸ் தேடிப் பிடித்து அறிவிக்கும் ஓரிரு வேட்பாளர்களையும் அன்புமணி தரப்பு விலை கொடுத்து வாங்குவதால் அவர் விரக்தியடைந்து உள்ளார்’ என்றனர்.

இந்நிலையில், நேற்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விக்கிரவாண்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புகழேந்தி, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால் அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைக்கக்கூடாது’’ என கூறியுள்ளார். ராமதாசை போலவே சசிகலா அறிவித்து வரும் வேட்பாளர்களும் மாற்றுக் கட்சிக்கு தாவுவதால் அவரும் கலக்கம் அடைந்துள்ளார்.

சசிகலா கட்சியில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குமார் திமுகவில் அமைச்சர் வேலுவை சந்தித்து இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு மாற்று வேட்பாளராக உதயகுமாரை சசிகலா அறிவித்தார். நேற்று விக்கிரவாண்டி தொகுதியில் ராமதாஸ் தரப்பு அறிவித்த வேட்பாளர் புகழேந்தியும் அன்புமணியிடம் இணைந்துள்ளார். இதுபோல் சசிகலா, ராமதாஸ் தரப்பில் அறிவிக்கும் வேட்பாளர்கள் மாற்றுக் கட்சிக்கு விலை போய் வருவதால் கூட்டணி கலகலத்து போய் அவர்கள் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

Tags : Ramdas ,Anbumani ,Tata ,Ramadas ,Bamaka ,Anbumani Party ,Adimuka ,Bahja ,
× RELATED ஒரே தொகுதியில் மோதும் பங்காளிகள்