ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜ சிட்டிங் எம்எல்ஏ.வாக இருப்பவர் சரஸ்வதி. இவர், முதுமையின் காரணமாக இந்த முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என கூறினார். இதனால், மொடக்குறிச்சி தொகுதியை குறி வைத்து பாஜ நிர்வாகிகள் வட்டமிட்டு வந்தனர். ஆனால், எம்எல்ஏ சரஸ்வதி, டெல்லி தலைமையில் பேசி, அவரது மருமகளான கிருத்திகாவுக்கு வாய்ப்பு பெற்று கொடுத்தார். இது மாவட்டத்தில் உள்ள பாஜ நிர்வாகிகளை கொதிப்படைய செய்தாலும், அதை மறந்து பிரசாரம் செய்ய தொடங்கி விட்டனர்.
புதிய முகமான கிருத்திகா, புதுவிதமான பிரசாரத்தை முன்னெடுப்பார் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், மொடக்குறிச்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட கிருத்திகா, அங்குள்ள உணவகத்திற்கு சென்று, தோசை சுட்டு வாக்கு சேகரித்தார். அதே உணவகத்தில் அவர் சுட்ட தோசைக்கு பதில் புரோட்டாவை சாப்பிட்டார். இதற்கு அவரது கட்சியினர், கிருத்திகா, புதிய பாணியில் பிரசாரம் செய்வார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரும் பழைய வேட்பாளரை போலவே, தோசையை தான் சுட்டு வருகிறார் என புலம்பியபடி சென்றனர்.
