×

உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை: நள்ளிரவு முதல் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நள்ளிரவு முதல் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான தவக்காலம் பிப்ரவரி 4ம் தேதி சாம்பல் புதன் தினத்திலிருந்து தொடங்கியது. சாம்பல் புதனிலிருந்து 40 நாட்கள் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. கடைசி வாரத்தில் வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாளான புனித வெள்ளி அனுசரிக்கப்படும்.

அதன்படி நேற்று முன்தினம் புனித வெள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும், திருப்பலிகளும் நடந்தன. இதையடுத்து, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று நள்ளிரவு முதல் ஆலயங்களில் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கியது. கத்தோலிக்க ஆலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கும், சிஎஸ்ஐ ஆலயங்களில் இன்று அதிகாலை 4 மணிக்கும் ஈஸ்டர் திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது.

கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சென்னையில் சாந்தோம் பேராலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், பெரம்பூர் மாதா தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பாரிமுனை அந்தோணியார் தேவாலயம், சேலையூர் செயின்ட் மார்க் தேவாலயம், சேலையூர் சந்தோஷபுரம் செயின்ட் லூக் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி, வழிபாடுகள் நடந்தது.

Tags : Easter festival ,Chennai ,Wednesday ,Ash Wednesday… ,
× RELATED சொத்து விவரத்தில் குளறுபடி: கூடுதல்...