புதுடெல்லி: ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலை தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட சமாதான முயற்சிகளை ஈரான் அரசு இன்று அதிரடியாக நிராகரித்துள்ளது. ஈரான் மீதான போர் தொடங்கிய நாள் முதல் தற்போது வரை, ஈரானில் உள்ள 13,000க்கும் மேற்பட்ட இலக்குகளை அழித்துவிட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 80 சதவீதம் வரை நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் ஏற்பாடு செய்தது.
ஆனால், இன்று (ஏப். 4) இந்த சமாதான முயற்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள 15 அம்ச கோரிக்கைகள் எற்றுக் கொள்ள முடியாதவை என ஈரான் அறிவித்துள்ளது. இது குறித்து ஈரான் தரப்பில், ‘அமெரிக்க பிரதிநிதிகளை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேச முடியாது. அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்க முடியாது. அதற்கு பதிலாக, இதுவரை ஏற்பட்ட இழப்புகளுக்கு முழுமையான நஷ்டஈடு வழங்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தாது என்பதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ என்று ஈரான் பிடிவாதமாக கூறியுள்ளது.
இதனால் இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்தியஸ்தம் செய்யும் இடங்களை தோகா அல்லது இஸ்தான்புல் நகரங்களுக்கு மாற்ற ஆலோசிக்கப்படுகிறது. அதே சமயம், போர்க்களத்தில் ஈரான் தனது 93வது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. குவைத் மற்றும் அபுதாபியில் உள்ள எரிசக்தி மையங்களை குறிவைத்து ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் இந்த பிடிவாதமான முடிவால், அமைதி பேச்சுவார்த்தைக்கு பதில் போர் மேலும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது.
