- பஞ்சாப் கிங்ஸ்
- சென்னை கிங்ஸ்
- ஆர்யா
- பிரப்சிம்ரன்
- ஸ்ரேயாஸ்
- சென்னை
- சென்னை சூப்பர் கிங்ஸ்
- ஐபிஎல்
- செபாக் ஸ்டேடியம்
- பஞ்சாப்
- சிஎஸ்கே…
சென்னை: 19வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்றிரவு நடந்த 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 43 பந்தில் 73, ஷிவம் துபே நாட் அவுட்டாக 27 பந்தில் 45, சர்ப்ராஸ் கான் 12 பந்தில் 32 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 39 ரன் விளாசி அதிரடி தொடக்கம் அளித்தார்.
பிரப்சிம்ரன் சிங் 34 பந்தில் 43, கூப்பர் கனோலி 22 பந்தில் 36, கேப்டன் ஸ்ரேயாஸ் 29 பந்தில் 4பவுண்டரி,3சிக்சருடன் 50 ரன் விளாசினர். 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன் எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரியான்ஷ் ஆர்யா ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில் குஜராத்தை வீழ்த்திய அந்த அணிக்கு இது 2வது வெற்றியாகும். முதல் போட்டியில் ராஜஸ்தானிடம் வீழ்ந்த சிஎஸ்கேவுக்கு இது 2வது தோல்வியாகும்.
வெற்றிக்கு பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறியதாவது: உண்மையைச் சொல்லப்போனால், இந்த மைதானத்திற்குள் நுழையும்போது ஒருவித பயம் கலந்த கவலை இருந்தது. ஆனால் நாங்கள் விளையாடிய விதம், குறிப்பாக அந்த ஆரம்பம் மிகவும் சிறப்பாக அமைந்தது. பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்தனர். அவர்கள் அமைத்துக் கொடுத்த அந்த வலுவான அடித்தளம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு வேலையை எளிதாக்கியது. பல ஆண்டுகளாக அவர்கள் இப்படித்தான் விளையாடி வருகிறார்கள். 208 ரன் போன்ற ஒரு பெரிய இலக்கை துரத்தும்போது ஆர்யா 11 பந்தில் 39 ரன் அடித்தால் அதைவிடச் சிறந்த தொடக்கம் வேறொன்றும் இருக்க முடியாது. பேட்டிங் செய்ய இது ஒரு சிறந்த ஆடுகளம். முதல் 2 போட்டிகளிலேயே அனைவருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அழுத்தமான சூழல்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற அனுபவத்தைத் தருகிறது, என்றார்.
ஸ்ரேயாஸ் அய்யருக்கு ரூ.24 லட்சம் அபராதம்;
நேற்றைய போட்டியின் போது பஞ்சாப் 20 ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. ஏற்கனவே முதல் போட்டியிலும் இதே தவறை செய்ததால் கேப்டன் ஸ்ரேயாசுக்கு ரூ12லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2வது முறையாக ஓவர் ரேட்டில் சிக்கியதால் அவருக்கு ரூ.24லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இம்பாக்ட் பிளேயர் உட்பட மற்ற 11 பேருக்கும் தலா ரூ.6லட்சம் அல்லது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பந்துவீச்சில் இன்னும் முன்னேற வேண்டும் !
தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது: இந்த ஆடுகளத்திற்கு இந்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் தான். சுழற்பந்து வீசும்போது பந்துகொஞ்சம் நின்று வந்ததாக நினைத்தேன். இதனால் தான் சுழற் பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக உள்ளே கொண்டு வந்தேன். ஆனால் 2 ஸ்பின்னர்களுக்குமே அவர்களுடைய நாட்களாக இது இல்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம். பந்துவீச்சில் எங்களுக்கு போதிய உத்வேகம் கிடைக்கவில்லை. நிச்சயம் இந்த தோல்வியை மனதில் எடுத்துக் கொள்ள கடினமாக இருக்கிறது. பேட்டிங் பொருத்தவரை எங்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. பந்துவீச்சில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டும், என்றார்.
நானும் ஒரு ஆசிரியராக ஆகியிருக்கலாம்….
ஆட்டநாயகன் பிரியான்ஷ் ஆர்யா கூறுகையில், : நான் சிறு வயதிலிருந்தே ஓரளவிற்கு இப்படித்தான் (ஆக்ரோஷமான. பேட்டிங்) இருப்பேன், மேலும் அது அணிக்கு நன்மை பயக்கும் என்பதால், இந்த பாணியில் விளையாடுகிறேன். தினமும் 1 முதல் ஒன்றரை மணி நேரம் பயிற்சி செய்வேன். எனக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும். என் குடும்பப் பின்னணி ஆசிரியர்களைக் கொண்டது, என் சகோதரியும் ஒரு ஆசிரியை. சில சமயங்களில் நானும் ஒரு ஆசிரியராக ஆகியிருக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அப்போது இனி ஆசிரியர் ஆவீர்களா என்ற கேள்விக்கு. இப்போது அதற்கு வாய்ப்பே இல்லை என புன்னகையுடன் கூறினார்.
பிட்ஸ்..பிட்ஸ்..
* அனைத்துவித டி.20ல் பஞ்சாப் 9வது முறையாக 200 பிளஸ் ரன்னை சேசிங் செய்துள்ளது. 7 முறை சேசிங்குடன் ஆஸ்திரேலியா 2வது இடத்தில் உள்ளது.
* நேற்று 210 ரன்னை சேசிங் செய்தது தான் பஞ்சாப் அணியின் 2வது அதிக பட்சமாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு கேகேஆருக்கு எதிராக கொல்கத்தாவில் 262 ரன்னை சேசிங் செய்தது.
* 200 பிளஸ் ரன் அடித்தும் சிஎஸ்கே, பஞ்சாப்பிடம் ஐந்தாவது முறையாகத் தோற்றுள்ளது.
* சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ஆடிய கடைசி 6 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.
* டோனி இல்லாமல் சிஎஸ்கே ஆடிய 7 போட்டியில் 6ல் தோல்வி அடைந்துள்ளது.
