சென்னை: தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி சென்னையில் ஆலோசனை மேற்கொள்கொண்டுள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் நேற்று அறிவித்த நிலையில் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு மீண்டும் சென்னை திரும்பிய அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த தேர்தலில் பாஜகவினுடைய வியூகம் எப்படி இருக்க வேண்டும்,தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
