புதுடெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று நிறைவடைந்த நிலையில் கூட்டத்தொடர் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்.16ல் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு மார்ச் 9ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
அப்போது அவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ சபை ஒத்திவைக்கப்படுவதாகவும் மிக முக்கியமான மசோதாவிற்காக விரைவில் அவை மீண்டும் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். அவையின் திட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கிரண் ரிஜ்ஜூ ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அவை எடுத்துக்கொள்ளும் என்றார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மிக முக்கியமான மசோதாவை நாங்கள் கொண்டு வருவதற்கு உள்ளோம். நாம் மிக விரைவில் கூடுவோம் என்றார். இதனை தொடர்ந்து அவையில், ஆந்திரப்பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வகைசெய்யும் மசோதாவை கொண்டு வர வசதியாக பட்ெஜட் கூட்டத்தொடர் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16ல் மீண்டும் அவை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய ஆயுதக் காவல் படைகள் (பொது நிர்வாகம்) மசோதா, 2026 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே, இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசரமான அரசு அலுவல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏப்ரல் 16-ஆம் தேதி அவையை மீண்டும் கூட்டுமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடமிருந்து தனக்கு ஒரு கோரிக்கை வந்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அவை மீண்டும் கூடும்போது, கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் மற்றும் தனிநபர் மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஆகியவை இடம்பெறாது என்றும் அவர் கூறினார். புதிய சட்ட மசோதாக்களைக் கையாள்வதற்காக, இரு அவைகளும் ஏப்ரல் 16 முதல் மூன்று நாட்களுக்கு மீண்டும் கூடவுள்ளன. இக்கூட்டத்தொடரின் இறுதியில் அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படும். பின்னர் மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் அவை மீண்டும் கூடும்.
* காலாவதி விதிகளை தளர்த்த வேண்டும்
மாநிலங்களவையில் என்சிபி-எஸ்சிபி எம்பி பவுசியா கான் பூஜ்ய நேரத்தின்போது பேசுகையில்,\\”ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டுக் கொள்கைகளில் உள்ள கடுமையான காலாவதி விதிகளை தளர்த்தி சலுகை காலத்தை 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக நீடிக்க காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐஆர்டிஏஐக்கு உத்தரவிட வேண்டும்\\” என்று வலியுறுத்தினார்.
