திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து 10 வருடங்களாக ஆட்சியில் உள்ள இடதுசாரி கூட்டணி சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. கோழிக்கோட்டில் முதல்வர் பினராயி விஜயன் அறிக்கையை வெளியிட்டார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: கேரளாவில் வறுமை ஒழிக்கப்படும். அதிக வறுமையில் உள்ள 5 லட்சம் குடும்பங்களை தேர்வு செய்து அவர்கள் வறுமையிலிருந்து மீள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எல்லா நல ஓய்வூதியங்களும் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.
படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ பாதுகாப்பு வழங்கப்படும். மூத்த குடிமக்களுக்கு சர்வதேச தரத்திலான மருத்துவ பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். படித்து முடிக்கும் அனைவருக்கும் வேலை உறுதி செய்யப்படும். இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க வட்டி இல்லா கடன் வழங்கப்படும். உலகளாவிய திறன் மையங்கள் 40லிருந்து 120 ஆக உயர்த்தப்பட்டு 2 லட்சம் பேருக்கு தொழில் வழங்கப்படும்.
வேலை செய்யும் வயதுடைய பெண்களில் 50 சதவீதம் பேருக்கு தொழில் உறுதி செய்யப்படும். நெல்லின் ஆதார விலை ரூ. 35 ஆகவும், தேங்காய்க்கு ரூ. 45 ஆகவும், ரப்பருக்கு ரூபாய் 300 ஆகவும் உயர்த்தப்படும். திருவனந்தபுரத்திலும், கோழிக்கோட்டிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும். கொச்சி நீர் மெட்ரோ ஆலப்புழா, கொல்லம் மற்றும் கொடுங்கல்லூர் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். ரயில்வே கேட்டுகள் இல்லாத மாநிலமாக கேரளா மாற்றப்படும். இவ்வாறு இடதுசாரி கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசம், மாணவிகளுக்கு ரூ. 1000 உதவித்தொகை: இது காங்கிரசின் தேர்தல் அறிக்கை
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. கொச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிக்கையை வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணத்திட்டம் கொண்டு வரப்படும்.
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும். நல ஓய்வூதியம் ரூ. 3 ஆயிரமாக உயர்த்தப்படும். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி பெயரில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு. இளைஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.
மூத்த குடிமக்களின் நலனுக்காக தனித்துறை. தகுதியுள்ள மாணவர்கள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கே.ஆர். நாராயணன் பெயரில் கல்வி உதவித்தொகை, கடன் உதவித்தொகை. அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை. ஆஷா பணியாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
