பிரசாரத்துக்கு வர மாட்டேன்: முதல்வர் ரங்கசாமி ஆவேசம்

புதுச்சேரியில் தேஜ கூட்டணியில், பாஜ, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைந்து வேட்பாளரை அறிவித்தாலும், இன்னமும் புகைச்சல் இருந்தபடியே உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் தொகுதிகளான உழவர்கரை, நெடுங்காடு ஆகிய தொகுதிகளில் பாஜவில் சீட்டு கேட்டவர்களுக்கு கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கியுள்ளனர். இது ரங்கசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுயேச்சையாக போட்டியிடும் உழவர்கரை சரவணன், நெடுங்காடு விக்னேஷ் ஆகியோரை பாஜவில் இருந்து நீக்கினாலும் ரங்கசாமிக்கு ஆத்திரம் தீரவில்லை.

அவர்களை தேர்தல் பணியில் இருந்து ஒதுங்க சொல்லுமாறும், எங்களுடைய வெற்றி பாதிக்கிறது என்று பாஜ தலைமையிடம் ரங்கசாமி கூறியுள்ளார். அதற்கு பாஜவினர், உழவர்கரை, நெடுங்காடு தொகுதியில் சீட்டு கேட்டும் தரவில்லை. மேலும் அந்த தொகுதியில் முன்கூட்டியே போட்டியிட இருவருமே திட்டமிட்டுவிட்டனர். இப்போது எப்படி ஒதுங்க சொல்வது, கட்சியை விட்டு நீக்கிவிட்டோம் என கூறியுள்ளனர். அப்படியானால் நான் பாஜ தொகுதிகளில் பிரசாரத்துக்கு வரமாட்டேன். நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என ரங்கசாமி மிரட்டியுள்ளார். சரி உங்கள் விருப்பம்.

ஆனால் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் அனைவரையும் ஆதரித்து பாஜ சார்பில் பிரதமர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் நிதின் நபின், அண்ணாமலை என வரிசையாக பிரசாரம் செய்யவுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். உடனே, பாஜ போட்டியிடும் 10 தொகுதிகளில், ரங்கசாமிக்கு வேண்டப்பட்ட சபாநாயகர் செல்வம் தொகுதிக்கு மட்டும் பிரசாரம் செய்ய ரங்கசாமி ஒப்புக்கொண்டுள்ளாராம். ‘‘சரி இப்போ உங்க நேரம் நல்லா இருக்கு. எங்க நேரம் வரட்டும், அப்புறம் பாத்துக்கறோம்’’ என பாஜவினர் புலம்பி வருகின்றனர்.

Related Stories: