அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, போகாஜன் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரட்டன் எங்தியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் மிகவும் ஊழல் மிகுந்த முதல்வர் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆவார். ஊழலில் அவரது குடும்பமும் முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும். தற்போது, அவர் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அதன் பிறகு அவர் முற்றிலும் அமைதியாகிவிடுவார்.
முதல்வர் சர்மா அசாம் மாநிலத்தை பல்வேறு கூட்டுக்குழுக்கள் மூலம் நிர்வகித்து வருகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக அவர் முழுமையாக மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளார். 3 பெரிய நிறுவனங்களுக்கு அசாமில் மொத்தம் 98,400 பிகாக்கள் நிலம் தாரை வார்க்கப்பட்டுள்ளது. மோடி, அமித்ஷா மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் அசாமில் ஒரு நில ஏடிஎம்ஐ உருவாக்கியுள்ளனர். அவர்கள் மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து, அதை பெரிய தொழில் அதிபர்களுக்கு வழங்குகிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல இசைக் கலைஞர் ஜூபின் கார்க் ஒரு தனி நபருக்காகவோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காகவோ, ஒரு மொழிக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வரலாற்றிற்காகவோ மட்டும் நிற்கவில்லை. அவர் அசாமின் பன்முக கலாச்சார மற்றும் பல மத மரபுகளின் ஆன்மாவைப் பிரதிபலித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், 100 நாட்களுக்குள் அவருக்கு நீதி பெற்றுத் தருவோம்; இது 100 சதவீதம் உறுதியானது. இவ்வாறு பேசினார்.
