இந்தியர்களுக்கு பாதுகாப்பு தர முடியாத மோடி முதுகெலும்பு இல்லாத கோழை: பிரியங்கா காந்தி கடும் தாக்கு

வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்பியான பிரியங்கா காந்தி நேற்று திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார். திருவனந்தபுரம் அருகே சிறையின்கீழ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கேரள மக்களுக்கு ஒரு புதிய அரசு கண்டிப்பாக தேவையாகும். கடந்த 10 வருடங்களாக நடைபெற்று வரும் மோசமான ஆட்சியால் மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்கு சுகாதாரத்துறை முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது.

கேரளாவில் படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கிறது. சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்திய ஆஷா தொழிலாளர்களின் குரல்வளையை கேரள அரசு நெரித்து விட்டது. தேர்தல் நெருங்கிய போது தான் அவர்களுடன் கேரள அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆஷா தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த சம்பளம் தான் கிடைக்கிறது. அவர்கள் செய்யும் பணிக்கு உகந்த சம்பளம் கிடைப்பதில்லை.

ஆஷா தொழிலாளர்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்ள மறுக்கிறது. மீனவர்களுக்கும் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. பெரிய முதலாளிகள் துறைமுகங்களை நடத்தும் போது மீனவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எம்பிக்கள் உதவி செய்ய தயாராக இருக்கின்றனர். ஆனால் கேரள அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியின் பி டீமாக செயல்படுகிறார். பினராயி விஜயனுக்கு மட்டும் மோடி அரசு எப்படி சலுகைகளை வழங்குகிறது என்று புரியவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோயிலை கொள்ளையடித்த பிறகும் அது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு வாழும் இந்தியர்களுக்கு மோடி அரசு எந்த பாதுகாப்பும் அளிக்கவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முன் மோடி மண்டியிடுகிறார். அவர் ஒரு முதுகெலும்பு இல்லாத கோழை ஆவார். நம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மோடி அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டார். கோழையான மோடியால் இந்தியாவுக்காக தலை நிமிர்ந்து நிற்க தைரியம் இல்லை. எப்ஸ்டீன் கோப்புகளில் அவருடைய பெயர் இருப்பது தான் இதற்கு காரணமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: