வேலூர், ஏப்.3: வேலூர் பதிவு மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்த நிலையில், தேர்தல் விதிமுறையால் 2025-2026ம் நிதியாண்டின் கடைசி நாளில் ரூ.4.56 கோடியாக வருவாய் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2025-2026ம் நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் 30ம் தேதி அனைத்து சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, பொதுமக்கள் பத்திரங்களை பதிவு செய்தனர். இதன்மூலம் வேலூர் பதிவு மண்டலத்தில் கடந்த 30ம் தேதி ஒரே நாளில் ரூ.4.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் பதிவு மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய 5 பதிவு மாவட்டங்களில் 45 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் கடந்த 30ம் தேதி 1,767 பத்திரங்கள் பதிவு செய்து, ரூ.4.56 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாளான 30ம் தேதி 1,892 பத்திரங்கள் பதிவு செய்து, ரூ.8.72 கோடி வருவாய் கிடைத்தது. இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டின் கடைசி நாளில் பத்திரங்கள் எண்ணிக்கையும், வருவாயும் குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
