10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது உற்சாக ஆட்டம் போட்ட மாணவ, மாணவிகள்

வேலூர், ஏப்.3: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிந்த நிலையில், கோடை விடுமுறையை அனுபவிக்கும் உற்சாக ஆட்டம் போட்டபடி மாணவ, மாணவிகள் வீடு திரும்பினர். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கியது. நேற்று ஏப்ரல் 2ம் தேதி சமூக அறிவியலுடன் 5 பிரதான பாடங்களுக்கான தேர்வு நிறைவடைந்தது. விருப்பமொழி தேர்வு ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் விருப்பமொழி பாடத்தை யார் வேண்டுமானாலும் படித்து தேர்வு எழுதலாம். இது விருப்பமொழி தேர்வு செய்யாத மாணவர்களுக்கு பொருந்தாது. இதன் அடிப்படையில் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 82ஆயிரத்து 806 மாணவர்கள், 26ஆயிரத்து 196 தனித்தேர்வர்கள், 395 சிறைக்கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 9ஆயிரத்து 397 பேர் எழுதினர். வேலூர் மாவட்டத்தில் 102 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு தேர்வை மொத்தம் 18 ஆயிரத்து 411 பேர் எழுதினர். நேற்று சமூக அறிவியலுடன் இத்தேர்வு முடிவடைந்த நிலையில், அந்த மகிழ்ச்சியை கேள்வித்தாள்கள், பேப்பர், பேனாக்களை தூக்கியடித்து துள்ளல் ஆட்டம் போட்டபடி மாணவ, மாணவிகள் தங்கள் நண்பர்களுக்கு கைகுலுக்கலுடன் விடை கொடுத்தபடி வீடு திரும்பினர்.

Related Stories: