×

ஆம் ஆத்மி ஆட்சியில் பொருத்தப்பட்ட1.5 லட்சம் சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்ற டெல்லி அரசு முடிவு.! என்ன காரணம்?

சீன நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 1.50 லட்சம் சிசிடிவி கேமராக்களை மாற்ற டெல்லி மாநில அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக் காலத்தில் பொருத்தப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் சிசிடிவி கேமராக்களை மாற்ற தற்போதைய டெல்லி அரசு அதிரடி முடிவெடுத்து உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சீன நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட அந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் முக்கியமான தரவுகள் கசியலாம் என்ற சந்தேகமே. ஆம் ஆத்மி கட்சியின் (AAP) ஆட்சிக்காலத்தில் டெல்லி நகரம் முழுவதும் பொருத்தப்பட்ட, சீனாவில் தயாரிக்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்றும் பணியை, டெல்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் சமீபத்தில் துவக்கி வைத்தார்.

முன்னதாக டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியில் இருந்த போது பொதுப்பணித்துறையின் கீழ், இரண்டு கட்டங்களாக மொத்தம் 2,74,389 சிசிடிவி கேமராக்கள் அங்கு நிறுவப்பட்டன. இதில் செப்டம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரை1,40,000 கேமராக்களும், இரண்டாம் கட்டமாக ஜூன் 2025 முதல் மார்ச் 2026 வரை சுமார் 1,34,389 கேமராக்களும் நிறுவப்பட்டன. முதல் கட்டத்தில் நிறுவப்பட்ட அனைத்து கேமராக்களும் Hikvision என்ற சீன நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். டெல்லியின் துணை முதலமைச்சர் பர்வேஷ் சாஹிப் சிங் சீன சிசிடிவி டெல்லை நகரம் முழுவதும் பொருத்தப்பட்டது குறித்து கூறுகையில், ‘நகரம் முழுவதும் சீன நிறுவனமான ஹிக்விஷனின் கேமராக்களை பொருத்தும் போது, ​​ஆம் ஆத்மி கட்சி இந்த நடவடிக்கையின் நீண்டகால பாதுகாப்பு விளைவுகளைக் கருத்தில் கொள்ளவில்லை. உண்மையில் கண்காணிப்பு என்பது வெறும் வெளி தோற்றத்திற்கான விஷயம் அல்ல; அது முக்கிய தரவுகளைக் கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடைய ஒரு தீவிர பிரச்சினை’ என்றார். அதுவும் டெல்லி போன்ற ஒரு முக்கிய நகரம் முழுவதும் இது போன்ற தொழில்நுட்ப நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ​​அது நேரடியாக தேசிய பாதுகாப்பைப் பாதிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, ஆம் ஆத்மி இந்த செயலின் தீவிரத்தை புரிந்துகொள்ள தவறிவிட்டது’ என்று சாடி இருக்கிறார்.

டெல்லி நகரத்தில் பொருத்தப்பட்டுள்ள சீன நிறுவன சிசிடிவி கேமராக்களை படிப்படியாக அகற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம். சீன சிசிடிவி கேமராக்களுக்கு பதிலாக உயர் தரவுப் பாதுகாப்பு தரங்களைப் பூர்த்தி செய்யும் மற்றும் வலுவான சேவை ஆதரவைக் கொண்ட நவீன, பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட சாதனங்கள் மாற்றி பொருத்தப்படும். நகரின் கண்காணிப்பில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, இந்த செயல்முறை படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்றும் கூறி உள்ளார்.

முதல் கட்டமாக 50,000 சீன கேமராக்களை மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினரை பொறுத்த வரை அவர்களுக்கு இது வெறும் எண்ணிக்கை மற்றும் விளம்பரம். ஆனால் எங்களுக்கு இது பாதுகாப்பு மற்றும் டெல்லி குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பானது, எனவே இதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Delhi government ,Delhi state government ,Yes Atmi Party ,Delhi ,
× RELATED இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக...