பின்னலாடை தயாரிப்புக்கான நூல் விலை 2 நாளில் கிலோவுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது.திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்ப நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வருவது வழக்கம். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதில் கடந்த மாதம் அனைத்து வகையான நூல்களுக்கும் கிலோவிற்கு 7 ரூபாய் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. பஞ்சு பற்றாக்குறை காரணமாகவும் இறக்குமதியாகும் பஞ்சின் மீது வரி விதிப்பு காரணமாகவும் இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கு ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும் எனவும் தொழிற் துறையினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஏப்ரல்) நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் கிலோவுக்கு ரூ.10ம், நேற்று ரூ.2ம் என மொத்தம் கிலோவுக்கு ரூ.12 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளது. இதன்படி 10ம் நம்பர் கோம்டு நூல் ரூ.209, 16-ம் நம்பர் ரூ.219, 20-ம் நம்பர் கோம்டு நூல் ரூ.277, 24-ம் நம்பர் ரூ.287, 30-ம் நம்பர் ரூ.297, 34-ம் நம்பர் ரூ.317, 40-ம் நம்பர் ரூ.337, 20-ம் நம்பர் செமி கோம்டு ரூ.272, 24-ம் நம்பர் ரூ. 280, 30-ம் நம்பர் ரூ.293, 34-ம் நம்பர் ரூ. 306, 40-ம் நம்பர் ரூ.325க்கும் விற்பனை செய்யப்படுவதாக நூற்பாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
