ரகசிய காதல் திருமணம், வேலையிழப்பு காரணத்தால் சாப்ட்வேர் இன்ஜினியர் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை: பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்

பெங்களூரு: சாப்ட்வேர் இன்ஜினியரான கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த 20 நிமிடங்களில், அவர் தங்கியிருந்த குடியிருப்பின் 18ம் மாடியிலிருந்து குதித்து மனைவியும் தற்கொலை செய்து கொண்டார். தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பானு சந்தர் ரெட்டி (32) மற்றும் பிபி ஷாசியா சிராஜ் (30) ஆகிய இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரகசிய காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் இருந்த நிலையில், ஐதராபாத்தில் வசித்து வந்த இவர்கள் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவிற்கு குடிபெயர்ந்தனர்.

பானு சந்தர் ரெட்டி முன்பு அமெரிக்காவில் பல ஆண்டுகள் பணியாற்றி வந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட ஆட்குறைப்பு காரணமாக கடந்த ஆண்டு வேலையை இழந்தார். இந்தியா திரும்பிய அவர், நீண்ட நாட்களாக வேலை தேடி வந்த நிலையில் உடல்நலக் குறைவு மற்றும் பண நெருக்கடியால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையில் அவரது மனைவி ஷாசியா பிரபல நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில், ஐதராபாத் சென்றிருந்த ஷாசியா நேற்று பெங்களூரு வடக்கு பகுதியில் உள்ள கோத்தனூர் குடியிருப்புக்கு திரும்பினார். அப்போது, பெட்ரூம் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. தனது கணவர் போன் அழைப்புகளை ஏற்காததாலும், நீண்ட நேரம் கதவைத் திறக்காததாலும் சந்தேகமடைந்த அவர், பாதுகாப்பு ஊழியர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பானு சந்தர் ரெட்டி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. தகவலறிந்த போலீசார், அங்கு பானு சந்தர் ரெட்டி எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இதற்கிடையே கணவனின் உடலைப் பார்த்து கதறிய ஷாசியா, அங்கு கூடியிருந்த அக்கம்பக்கத்தினருக்கு இடையில் இருந்து திடீரென யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். சோகத்தில் இருந்த அவர், அதே குடியிருப்பின் 18ம் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘வேலையில்லாத காரணத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல்நிலை பாதிப்பால் பானு சந்தர் ரெட்டி தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் இறந்த 20 நிமிடங்களில் அவரது மனைவியும் மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்’ என்று தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிதேரத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: