மலைகள் பாதுகாப்புக்கு ரூ.1950 கோடியில் 2 ரேடார்கள்: பெல் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்

புதுடெல்லி: இந்திய விமானப்படைக்காக 2 மலை ரேடார்கள்(மவுன்டன் ரேடார்) மற்றும் அதனுடன் தொடர்புடைய கருவிகள், தேவையான உள்கட்டமைப்புகளை செய்வதற்காக பாதுகாப்பு அமைச்சகம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பெல்) நிறுவனத்துடன் பெரிய கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மலை ரேடார்கள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) எலக்ட்ரானிக்ஸ், ரேடார் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடார்கள் பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். இதற்காக ரூ.1950 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று கையெழுத்திட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மலைகள் மற்றும் உயரமான நிலப்பரப்பின் பாதுகாப்பிற்கு மலை ரேடார்கள் பயன்படுத்தப்படுகிறது. கடினமான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்ட தாழ்வாகப் பறக்கும் வான்வழி அச்சுறுத்தல்களை கண்டறிய இது உதவும். சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைக்கு இந்த அமைப்புகள் முக்கிய பங்காற்றும்.

Related Stories: