×

செங்கல்பட்டு அருகே உள்ள புதிய மலையேற்ற பாதை: ட்ரெக் தமிழ்நாடு அமைப்பு திட்டம்

 

சென்னை: சென்னைவாசிகளின் வார இறுதி நாள் சுற்றுலாவிற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், செங்கல்பட்டு அருகே உள்ள வல்லம் காப்புக்காட்டில் புதிய மலையேற்ற பாதையை அமைக்க ‘ட்ரெக் தமிழ்நாடு’ அமைப்பு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பாதைகள், தமிழ்நாடு வனத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மலையேற்ற வழிகாட்டிகளாக காடுகள் பற்றி பாரம்பரிய அறிவை கொண்ட, 50க்கும் மேற்பட்ட பழங்குடியின, வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழிகாட்டிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

www.trektamilnadu.com என்ற வலைதளத்தின் மூலம் மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தங்கள் முன்பதிவினை செய்து கொள்ளலாம். மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் மலையேற்றத்திற்கான நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையோடு அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில், சென்னையிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில் புதிய மலையேற்ற பாதி அமைக்கப்பட உள்ளது. இது, இயற்கை ஆர்வலர்களுக்கும், சாகச பிரியர்களுக்கும் ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமையவுள்ளது. காடுகளின் மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையேற்றப் பயிற்சிகள், வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளன. இதற்கான முன்பதிவுகள் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் முதல் கன்னியாகுமரியின் காளிகேசம் வரை அனைத்துப் பாதைகளுக்கும் தொடங்கியுள்ளன.

செங்கல்பட்டு அருகே அமையவுள்ள இந்த புதிய பாதை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவை கொண்ட ஒரு வட்ட பாதையாகத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 மணி நேர பயணத்தில் பயணிகள் முள்ளம்பன்றி, பொன்னிற நரி, புள்ளிமான், காட்டுப்பன்றி மற்றும் விதவிதமான வண்ணத்துப்பூச்சிகள் உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களையும் தாவரங்களையும் காண முடியும். இந்த மலையேற்றத்தின் போது பயணிகள் 2 மலை சிகரங்களை கடந்து, 2 வியூ பாயின்ட்களில் நின்று இயற்கையின் அழகை ரசிக்கலாம். செங்கல்பட்டு பகுதிக்கு செல்பவர்கள் காலையில் மலையேற்றத்தை முடித்துவிட்டு அன்றே சென்னைக்கு திரும்பும் வகையில் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும் 9 புதிய மலையேற்றப் பாதைகளை உருவாக்க ட்ரெக் தமிழ்நாடு அமைப்பு அரசுக்கு திட்ட வரைவு ஒன்றை அனுப்பியுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் இவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை சுமார் 26,000க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் 40 மலையேற்ற பாதைகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள் என்பதாகும்.

குறிப்பாக, நகர்ப்புறங்களில் வசிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வார இறுதி நாட்களில் காடுகளின் அமைதியை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. தற்போது திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் குகைகள் மற்றும் கும்பக்கரை அருவியில் தொடங்கி வெள்ளக்கவி வரை செல்லும் கொடைக்கானல் மலையேற்றப் பாதைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக மட்டும் ஏற்கனவே 150க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் சேதுமடை முகாம் பகுதியும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்குச் செல்பவர்கள் ஆழியார், டாப்சிலிப், பாண்டவரை மற்றும் பரம்பிக்குளம் போன்ற இடங்களையும் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலாத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா மட்டுமன்றி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த இயற்கை முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் டாப்சிலிப் பகுதியில் உள்ள வனத்துறை பழங்குடியின குடியிருப்பு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்காக 3 நாள் முகாம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற 21 மாணவர்கள் பறவைகள் கண்காணிப்பு, வானியல் ஆய்வு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆவணப்படங்களையும் கண்டு மகிழ்ந்தனர். இம்மாணவர்கள் எதிர்காலத்தில் பசுமைத் தூதுவர்களாக செயல்பட ஊக்குவிக்கப்படுகிறார்கள். தமிழக அரசின் இந்த முயற்சிகள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, சூழலியல் சுற்றுலாவுக்கும்பெரும் உந்துதலை அளித்துள்ளன.

40 பாதைகள் திறப்பு
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அரசின் துணையோடு மலையேற்ற பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டம், அதற்கான இணையதளத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்தார். 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகள் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதில், நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், திருப்பூர் மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம், தேனி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மலையேற்றப் பாதைகள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன.

மலையேற்ற திட்டம்
மக்களிடம் இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு, வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தவும், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த ‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ வடிவமைக்கப்பட்டு உள்ளது.

Tags : Chengalpattu ,Trek Tamil Nadu ,Chennai ,Vallam ,Tamil Nadu, Tamil Nadu… ,
× RELATED அதிர்ச்சியோடு விடிந்த காலை: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு