×

இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு

சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பின. பி.வில்சன் நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தில் பேசியதாவது:அரசுப் பணியில் சேர்வதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்புகளுக்கும், பங்கேற்பு மற்றும் நல்லாட்சிக்கும் ஓர் உந்துசக்தியாக விளங்கும் என்ற நம்பிக்கையில் மத்திய பணியாளர் தேர்வாணையமமான யூ.பி.எஸ்.சி. ஒரு நுழைவாயிலாகத் திகழ்கிறது.ஆனால், முதன் நிலை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகின்றன, அதே நேரத்தில் முதன்மை தேர்வுகள் அரசமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நடத்தப்படுகின்றன. முதனிலை தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே எழுதமுடியும் என கட்டுப்படுத்துவது தடையை உருவாக்குகிறது.

இந்தி அல்லாத மற்றும் ஆங்கிலம் அல்லாத பின்னணியைச் சேர்ந்த அறிவார்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சேர்ந்த தென்னிந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா அல்லது வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த ஒரு மாணவர், தனது தாய்மொழியில் அறிவுத்திறனை வளர்த்தும், அந்த உண்மையான திறனைப் பிரதிபலிக்காத ஒரு மொழியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆயிரக் கணக்கானோர் முதல் நிலையிலேயே வெளியேற்றப்படுவது அவர்கள் தகுதி இல்லாததால் அல்ல. மொழியியல் நீதியை மறுப்பதே காரணமாகும். ஆரம்ப வினாத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் இருப்பதால், கிராமப்புறங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தயங்குகிறார்கள். இந்தக் கட்டுப்பாடு சமமற்ற ஒரு போட்டிச் சூழலை உருவாக்குவதுடன், அரசுப் பணிகளில் சமமான வாய்ப்பை மறுப்பதன் மூலம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே மீறுகிறது. இது திட்டமிட்டு செய்யப்படும் புறக்கணிப்பு. எனவே, தமிழ் உட்பட அனைத்து 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளிலும் முதல்நிலைத் தேர்வு உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

முதல்நிலைத் தேர்விலிருந்து இறுதித் தேர்வு வரை கிட்டத்தட்ட 15 மாதங்கள் என்கிற தேர்வு நடைமுறை காலமே மிக நீண்டதாக உள்ளது. அதனால் ஒரு தேர்வர் ஒரு முயற்சியில் தோல்வியடைந்தால் ஓராண்டில் அவரது வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. இந்தக் கால அளவைக் குறைத்து, முதல்நிலைத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதைக் கருத்தில் கொள்ள வேண்டும். நேர்காணல் செயல்முறையும், ஆளுமைத் தேர்வும் வெளிப்படைத் தன்மையற்றதாகவும், பொறுப்பேற்க முடியாததாகவும், மறுஆய்வு செய்ய முடியாததாகவும் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறைகள் ஆங்கிலப் புலமை, நகர்ப்புற அனுபவம், உயர் கல்வி நிறுவனப் பின்னணிகளுக்குச் சாதகமாக உள்ளன என்ற தெளிவான கருத்தும், அதற்கான ஆதாரங்களும் அதிகரித்து வருகின்றன.

இதர பிற்படுத்தப்பட்டோர், சமூகப் பொருளாதாரப் பிரிவினர், பழங்குடியினர் ஆகியோரிடையே ஒரு தீவிரமான அச்சம் நிலவுகிறது. அதுஎன்னவென்றால், எழுத்துத் தேர்வில் பொதுப் பிரிவினருக்கு இணையாக மதிப்பெண்களைப் பெற்றாலும், நேர்காணலில் தங்களுக்கு விகிதாசாரத்திற்கு அதிகமாகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும், அதன் விளைவாகக் குறைந்த தரவரிசைகள், குறைக்கப்பட்ட வாய்ப்புகள் கிடைப்பதாகவும், தங்களை தகுதியானவர்களாகக் கருதப்படவில்லை என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள்.இது இதர பிற்படுத்தப்பட்டோர், சமூகப் பொருளாதாரப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை திட்டமிட்டு அகற்றும் ஒரு வழியாகவும். சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது. எனவே ஒன்றிய அரசாங்கம் நேர்காணல் மதிப்பெண்களைப் பிரிவினர் வாரியாகவும், கல்வி வாரியம் வாரியாகவும் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Tags : UPSC ,DMK ,P. Wilson ,Chennai ,DMK Rajya Sabha ,Zero Hour ,Central Staff Selection Commission ,
× RELATED ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக...