திருமலை: ரூ.82.91 லட்சம் சொத்து வரி பாக்கி உள்ளதால் ஐதராபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் யூசுப்குடா ஸ்ரீநகர் காலனியில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தின் சொத்து வரி கடந்த 2017ம் ஆண்டு முதல் ரூ.82.91 லட்சம் நிலுவையில் உள்ளது.
மேலும் வரி பாக்கி அதிகரித்து வருவதால், துணை ஆணையர் சுரேஷ் கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவுடன் தொடர்புடைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து உரிய பதில் வரவில்லை. இதனால் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரி பல்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் கட்டிடத்திற்கு நேற்று ‘சீல்’ வைத்தனர். வரி பாக்கி செலுத்தாததால் முன்னாள் முதல்வருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.
