வேலூர், ஏப்.1: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்ட 149 வாக்குச்சாவடிகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதலாக மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு மையங்கள், வாக்கு எண்ணும் மையங்களை தயார்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்(தனி), குடியாத்தம்(தனி) என்று 5 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 11 லட்சத்து 33 ஆயிரத்து 587 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக மாவட்டத்தில் 676 பள்ளிகள் மற்றும் கட்டிடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலூர் சட்டமன்ற தொகுதியில் 268 வாக்குச்சாவடிகளும், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 280 வாக்குச்சாவடிகளும், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 295 வாக்குச்சாவடிகளும், கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் 265 வாக்குச்சாவடிகளும், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் 319 வாக்குச்சாவடிகளும் என மாவட்டம் முழுவதும் 1,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 70 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 149 வாக்குச்சாவடிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வழக்கமாக பொருத்தப்படும் சிசிடிவி கேமராக்களை விட கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மேலும், இந்த 70 மையங்களில் மட்டும் துணை ராணுவப்படை வீரர்கள், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
