×

பைப் மூலம் இயற்கை எரிவாயு சப்ளை வழங்க வடமாவட்டங்களில் விைரவில் ஆய்வு துவக்கம் அதிகாரிகள் தகவல் சமையல் எரிவாயு கிடைப்பதில் இடர்பாடு எதிரொலி

வேலூர், ஏப்.1: சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தற்போதைய சிக்கல் மற்றும் எதிர்கால இடர்பாடுகளை தவிர்க்க பைப் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஆய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய உலகில் பெரும் பூதாகரமான பிரச்னையாக உணவை விட எரிபொருள் தொடர்பாக எழுந்து வரும் பிரச்னையே பிரதானமாக உள்ளது. இதற்காகவே உலக பெரும் வல்லரசுகள் தங்கள் வல்லமையை காட்டி உலக எரிபொருள் சந்தையை தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் வகையில் தங்கள் செயல்பாடுகளை வகுத்துள்ளன. அதற்கு சிறந்த உதாரணமாக வெனிசுலாவின் மீது அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட அழுத்தமும், சமீபத்தில் ஈரான் மீதான போரும் உள்ளன.

இது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. கச்சா எண்ணெய் சப்ளையில் எழுந்துள்ள இந்த சிக்கலால் அத்தியாவசிய பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முன்பு சிலிண்டர் முன்பதிவு செய்தால் சில தினங்களில் டெலிவரி செய்து விடுவார்கள். ஆனால் தற்போது 10 முதல் 25 நாட்கள் ஆனால் கூட சிலிண்டர் கிடைப்பதில்லை என்று பரவலாக புகார்கள் எழுந்து வருகிறது. ஓட்டல்கள் மின்அடுப்பு மற்றும் விறகு அடுப்பு பக்கம் திரும்பியுள்ளன.

இதுபோன்ற இடர்பாடுகளை களைவதற்காக மாற்றுவழியை நாட வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வாக பிஎன்ஜி எனப்படும் குழாய்வழி இயற்கை எரிவாயு அமைந்துள்ளது. சிலிண்டர்கள் மூலம் கேஸ் வாங்குவதற்கு பதிலாக தண்ணீர் குழாய் வசதி போல, நேரடியாக உங்கள் வீட்டிற்கு குழாய் மூலம் எரிவாயு சப்ளை செய்யப்படும். இந்த நடைமுறையில் சிலிண்டர் தீர்ந்து விடும் என்கிற கவலை இருக்காது. 24 மணி நேரமும் கேஸ் சப்ளை இருக்கும். எல்பிஜி சிலிண்டர்களை விட பாதுகாப்பானது. இயற்கை எரிவாயு காற்றை விட லேசானது என்பதால் ஒருவேளை கசிவு ஏற்பட்டாலும் காற்றில் விரைவாக கலந்து விடும்.

மின்சாரம் போல நாம் தேவைக்கு பணம் செலுத்தினால் போதுமானது. சிலிண்டர் போல முன்னரே பணம் செலுத்த தேவையில்லை. எவ்வளவு கேஸ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கு மட்டும் மாத இறுதியில் பணம் செலுத்தினால் போதும். சமையலறையில் பெரிய சிலிண்டர்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறிய மீட்டர் மற்றும் குழாய் மட்டுமே இருக்கும். நகரம் முழுவதும் பூமிக்கு அடியில் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு, சமையலறைக்கு ஒரு சிறிய இணைப்பு கொடுக்கப்படும். பயன்பாட்டை கணக்கிட மீட்டர் பொருத்தப்படும். சாதாரண ஸ்டவ்வில் சில மாற்றங்கள் செய்து இது இணைப்பில் இணைக்கப்படும். எவ்வளவு கேஸ் பயன்படுத்துகிறீர்களோ அதற்கு மட்டும் மாத இறுதியில் பணம் செலுத்தினால் போதும். சமையலறையில் பெரிய சிலிண்டர்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஏற்கனவே தமிழகத்தில் சென்னை மாநகரில் வடசென்னை, மத்திய சென்னை, பெரம்பூர், ராயபுரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் பிஎன்ஜி இணைப்பு வழங்கப்படுகிறது. இதனை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் தற்போது, கோவை போன்ற முக்கிய நகரங்களில் இந்த பணி வேகமாக நடந்து வருகிறது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி என வடமாவட்டங்களில் தீவிர களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Viera ,Vellore ,
× RELATED கே.வி.குப்பம் வாரச்சந்தையில் ஆடுகளின் விற்பனை மந்தம்