வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் தீ: மின்சார உற்பத்தியில் பாதிப்பு இல்லை

பொன்னேரி: வடசென்னை அனல்மின் நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன்காரணாக மின்சார உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் (நிலை3) குறைந்த அளவிலான நிலக்கரியை கொண்டு 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, கன்வேயர் பெல்ட் மூலம் அனல் மின் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு கிடங்கில் சேமித்து வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் அனல் மின் நிலையத்தின் பின்புறம் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி கிடங்கில் தீப்பிடித்து பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 50க்கும் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தினர். விடிய, விடிய போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் பல லட்சம் மதிப்பு நிலக்கரி எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், தீ விபத்து நடந்த பகுதியில் மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், ‘’நிலக்கரி கிடங்கில் ஏற்பட்ட தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது. தீ விபத்து காரணமாக மின் உற்பத்தியில் எந்தவித பாதிப்பு ஏற்படவில்லை. அனைத்து நிலையங்களில் முழுமையாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வடசென்னை அனல் மின் நிலையத்தில் 10 லட்சம் டன் நிலக்கரி சேமிக்கும் கிடங்கு உள்ளது. தற்போது 6 லட்சம் டன் உள்நாட்டு நிலக்கரியும் 1 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியும் கிடங்கில் கையிருப்பு உள்ளது.

1 லட்சம் டன் வெளிநாட்டு நிலக்கரி பிரிவில் நேற்று பிற்பகல் தானாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்துவிட்டனர். இன்று அதிகாலை முழுமையாக தீ அணைக்கப்பட்டது. வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட பிரிவில் 5 சதவீதம் குறைவாக நிலக்கரி சேதம் அடைந்துள்ளது.தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்துவிட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து 3 நாட்கள் தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தீயணைப்பு வீரர்களுக்கும் மின்வாரிய ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: