×

திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி: அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அம்பத்தூர்: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும்தான் போட்டி என கொரட்டூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிமனைகளை திறந்து வைத்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். 300க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம்தேதி நடக்கிறது. இதையொட்டி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கொரட்டூர், பாடி, அம்பத்தூரில் பகுதி திமுக நிர்வாகிகள் சார்பில் தேர்தல் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனைகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ரிப்பன் வெட்டி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருத்துவர் பூர்ணிமா, அமைச்சர் சேகர்பாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியின்போது, தமிழக வாழ்வுரிமை கட்சியில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டவர்கள், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, எம்எல்ஏ ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, திமுகவிற்கும்தமிழக வெற்றி கழகத்திற்கும் தான் போட்டியென விஜய் கூறிய நிலையில், பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவிற்கும் இடையேதான் போட்டி என கூறிய அவர், தவெகவை விட்டுத்தள்ளுங்கள். அதிமுக தொடர்பான கேள்விகளை மட்டும் என்னிடம் கேளுங்கள் என கூறியுள்ளார்.

Tags : DMK ,AIADMK ,Minister ,Sekarbabu ,Ambattur ,Tamil Nadu Assembly elections ,Korattur ,Padi ,
× RELATED ஏப்.3ம் தேதி அனைத்து தொகுதி திமுக...