ஈரான் மீதான போர் தொடங்கி ஒரு மாதமான நிலையில் கச்சா எண்ணெய் விலை 30 நாட்களில் 50% உயர்வு

டெல்லி:மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது.அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தீவிரமான ராணுவ மோதலால், உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்தில் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாக மூடியுள்ளது. இதுமட்டுமின்றி, கத்தாரில் உள்ள ரஸ் லாபன் எரிவாயு முனையம், சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சந்தைக்கு நாளொன்றுக்கு கிடைக்க வேண்டிய 80 லட்சம் முதல் 1 கோடியே 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.

இந்த விநியோக தட்டுப்பாடானது உலக பொருளாதாரத்தில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் 3.7 சதவீதத்தை எட்டும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பங்குச்சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி குறியீடு இன்று காலை 4 சதவீதத்திற்கு மேல் சரிந்ததுடன், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் குறியீடும் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நாணய மதிப்பு டாலருக்கு நிகராக சரிந்து வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு 94.77 என்ற வரலாற்றுச் சரிவை எட்டியுள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விலை ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கேலனுக்கு ஒரு டாலர் உயர்ந்து, தற்போது 3.98 டாலராக உள்ளது.

இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க கடந்த 11ம் தேதி அவசரகால கையிருப்பில் இருந்து 40 கோடி பேரல் எண்ணெயை விடுவிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்து பொருளாதார வல்லுநர்கள் கூறுகையில், ‘சர்வதேச சந்தையில் கையிருப்பு எண்ணெய் விடுவிக்கப்பட்டது தற்காலிக ஆறுதலை மட்டுமே தந்துள்ளது. ஒருவேளை ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 185 டாலரை எட்டக்கூடும். இது ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு மிகப்பெரிய பொருளாதார மந்தநிலைக்கு தள்ளும் வாய்ப்புள்ளது’ என்று கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு நடந்த வளைகுடா போரின் போது கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்தது. அதுவே இதுவரை மிகப்பெரிய உயர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 115 டாலருக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: