*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
ஊட்டி : தாவரவியல் பூங்காவில் மலர்கள் பூக்காத நிலையில், கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்துள்ள மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஆண்டு தோறும் மே மாதம் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக தாவரவியல் பூங்காவில் ஊட்டியில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
மலர் கண்காட்சியின் போது கண்ணாடி மாளிகையில் பால்சம்,பெக்கோனியோ,களஞ்சியா,பிரமிளா, சைக்ளோமன்,கேக்டஸ்,கள்ளிச் செடிகள் உட்பட பல வண்ண மலர் செடிகள் தொட்டிகளில் வைத்து, அவைகள் பல வடிவங்களில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும்.
இதனை காண சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வமுடன் செல்வது வழக்கம்.மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் மலர்கள் பூக்காத நிலையில், தற்போது கண்ணாடி மாளிகையில் பூத்துள்ள பால்சம்,பிரமிளா,களஞ்சியா,ஜெரோனியம்,சைக்ளோமன் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.
அடுத்த வாரம் பெரும்பாலான செடிகளில் மலர்கள் பூக்க வாய்ப்புள்ளது.எனவே, பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் மட்டுமின்றி, பூங்கா முழுவதிலும் பல வண்ண மலர்களை கண்டு ரசிக்க வாய்ப்புள்ளது.
