×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஐரோப்பிய வகை ‘கருப்பு கேரட்’ சாகுபடி வெற்றி

குன்னூர் : குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐரோப்பிய வகை ‘கருப்பு கேரட்’ சாகுபடி வெற்றியடைந்துள்ளது.
​​நீலகிரி மாவட்டத்தின் தட்பவெப்ப நிலை மலைக்காய்கறிகள் சாகுபடிக்கு மிகவும் உகந்தது.

இங்கு விளையும் ஆரஞ்சு நிற கேரட்டுகளுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், முதன் முறையாக ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்ட கருப்பு நிற கேரட்டுகளைப் பயிரிட தோட்டக்கலைத் துறை திட்டமிட்டது.

​இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் உள்ள பசுமைக்குடிலில் சோதனை முறையில் இதன் விதைகள் நடவு செய்யப்பட்டன.​ தோட்டக்கலைத் துறையினரின் தீவிரப் பராமரிப்பில் வளர்ந்த இந்த கேரட்டுகள், நான்கு மாத காலத்தை நிறைவு செய்து தற்போது அறுவடைக்குத் தயாரானது.

இதனையடுத்து நேற்று தோட்டக்கலைத்துறை மேலாளர் நித்யா தலைமையில் பூஜைகள் செய்யப்பட்டு, பூங்கா ஊழியர்களால் கருப்பு கேரட்டுகள் அறுவடை செய்யப்பட்டன.

இது குறித்துப் பூங்கா மேலாளர் நித்யா கூறுகையில், ‘‘வழக்கமான கேரட்டுகளைப் போலவே இதுவும் 3 அல்லது 4 மாத கால பயிராகும். இதன் வெளித்தோற்றம் கருப்பு நிறத்தில் இருந்தாலும், சுவையில் ஆரஞ்சு நிற கேரட்டைப் போலவே அதிக இனிப்புத் தன்மையுடன் காணப்படுகிறது.

சிம்ஸ் பூங்கா ஊழியர்களின் தொடர் முயற்சியால் இந்த ஐரோப்பிய வகை கேரட் சாகுபடி நீலகிரி மண்ணில் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் நீலகிரி விவசாயிகளிடையே கருப்பு கேரட் சாகுபடியை ஊக்கப்படுத்த ஒரு முன்னோடியாக அமையும் என்றார்.

Tags : Gunnar Sims Park ,Nilgiri district ,
× RELATED சட்டமன்ற தேர்தலையொட்டி சோதனைச்சாவடிகளில் கலெக்டர் தொடர் ஆய்வு