- கடலூர்
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- சிபி ஆதித்யா
- தேவனாம்பட்டினம் சில்வர் பீச்
- தமிழ்நாடு சட்டமன்ற சட்டமன்றத் தேர்தல் 2026
*சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு
கடலூர் : தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தையும், விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் பங்களிப்பை வழங்கிட வேண்டும் என்பதற்காகவும், அதிலும் குறிப்பாக முதல் தலைமுறை, இளம் வாக்காளர்கள் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் வாக்குப்பதிவு செய்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேர்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகளும், வாக்குப்பதிவின் போது ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் மை குறித்த படங்களும், ஒலிபெருக்கி, துண்டுபிரசுரங்கள், தண்ணீர் கேன்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள், சமையல் எரிவாயு உருளை, மஞ்சப்பைகள் மூலமாகவும், பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணிகள், இருசக்கர வாகன மற்றும் ஆட்டோ பேரணிகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவிகள் அதிகமாக வந்துசெல்லக்கூடிய இடங்களை தேர்வு செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடும் பொருட்டு கடலூர், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை நிறைவேற்றிடும் விதமாக ரிட்லி ஆமை அமைப்பில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் ஜனநாயக முறையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, கடலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரராஜன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், வட்டாட்சியர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
