தவெகவில் 234 வேட்பாளர்களும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் நிறைய பேர் புதிதாக தவெகவில் சேந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரிய கூத்து என்வென்றால், மேடையில் சேர்ந்த ஒருவரை உடனே வேட்பாளராக விஜய் அறிவித்து உள்ளார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ஒரு ரகமாக வலம் வருகிறவர்கள். மாற்று கட்சியில் இருந்து வந்த 27 பேருக்கு விஜய் சீட் வழங்கியுள்ளதை பார்த்து, இதுதான் விஜய் தேடி தேடி கண்டுபிடிச்ச வேட்பாளர்களா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்த கதைய நீங்களே கேளுங்க… மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 2011ல் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் எம்.வி.கருப்பையா. இவர் இம்முறை சோழவந்தானில் அதிமுக சார்பில் சீட் கேட்டு விருப்பமனு செய்திருந்தார். ஆனால், அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கருப்பையா, இதே தொகுதியில் எப்படியாவது நானும் போட்டியிடுவேன் என நெருங்கியவர்களிடம் கூறியதோடு உடனடியாக சென்னை சென்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்தார்.
இதையடுத்து சோழவந்தான் தொகுதி தவெக வேட்பாளராக கருப்பையா அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சீட் வழங்கப்பட்டதால், தவெகவினர் அதிருப்தியில் உள்ளனர். தவெகவில் சேர்ந்த கருப்பையா, ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் அவரது உடல் நலனுக்காக, கிணற்று நீரில் மிதந்து ஆசனம் செய்வார். இதை அறிந்தே ஜெயலலிதா அவருக்கு எம்எல்ஏ தேர்தலில் வாய்ப்பளித்தார். இவர், ஜெயலலிதா இறந்த பின், ஓபிஎஸ் அணியில் சென்றார். பின்னர், பாஜவில் சேர்ந்த அவர், மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.
அங்கு சீட் கிடைக்காததால் தவெகவுக்கு தாவி உள்ளார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான தூசி கே.மோகன் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தார். ஆனால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. இதனால் அவரும் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியடைந்தனர். செய்யாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் என்கிற முறையில் தூசி கே.மோகனை சந்திக்கவில்லை.
இதனால் மேலும் விரக்தி அடைந்தாராம். இந்நிலையில் தவெக அவருக்கு அழைப்பு வரவே, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று முன்தினம் தூசி கே.மோகன் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தார். தவெக தலைவர் விஜய் வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கு முன்பாகவே தவெக சார்பில் வெளியான வாட்ஸ் அப் குருப்பிலும் நிர்வாகிகள் ஸ்டேட்டசிலும் செய்யாறு தொகுதியின் தவெக சார்பில் தூசி கே.மோகன் வேட்பாளராக போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், செய்யாறு தொகுதி வேட்பாளராக தூசி கே.மோகன் நிறுத்தப்படுவதாக நேற்று விஜய் அறிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி, ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்த அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் என்.திருப்பதி கடந்த 20 ஆண்டுகளாக அதிமுகவில் உள்ளார். இவர் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பமனு அளித்திருந்தார். ஆனால், திருப்பத்தூர் தொகுதி அமமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த டாக்டர் திருப்பதி அதிமுகவில் இருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் நேற்று தான் வேட்பாளர் அறிவிக்கும் மேடையில் தவெகவில் இணைந்தார்.
தவெகவில் இணைந்த உடனேயே டாக்டர் திருப்பதி, திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில், இன்ஸ்பெக்டராக இருந்த லட்சுமணன் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதிலிருந்து மீண்டு வெளியே வந்த லட்சுமணன், சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். பின்னர், ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய இவர், பெரிய அளவில் வருமானம் ஈட்டினார். பணம் கொழித்த நிலையில், பதவியில் இருக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை ஏற்பட்டது.
இதற்காக அதிமுகவில் சேர்ந்து, அவ்வப்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நெருக்கத்தை ஏற்படுத்தி வந்தார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்த லட்சுமணன், அதிமுக தலைமை நிலையத்தில் சேலம் மேற்கு, சங்ககிரி, சேலம் தெற்கு, திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். தனக்கு சீட் கொடுத்தால், கட்சிக்காக ரூ.100 கோடி வரை செலவு செய்ய தயார் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், அதிமுக சார்பில் லட்சுமணனுக்கு சீட் வழங்கவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு சேலம் மேற்கு தொகுதியை ஒதுக்கிய நிலையில், சங்ககிரியிலும் சீட் தராததால் விரக்தியடைந்த மாஜி இன்ஸ்பெக்டர் லட்சுமணன், அதிமுகவில் இருந்து விலகினார். உடனடியாக நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அதற்கு பிரதிபலனாக அவர் விரும்பியபடி, சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம், வேதராண்யம் தொகுதியில் தவெக வேட்பாளராக கிங்ஸ்லி ஜெரால்டு அறிவிக்கப்பட்டுள்ளார். மண்டல வழக்கறிஞர் அணி இணைச்செயலாளராக உள்ள இவர், கிறிஸ்தவ மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். இவர், ஏற்கனவே அதிமுக நகர செயலாளராக இருந்து விலகி, அமமுக அமைப்பு செயலாளராக இருந்தவர். கடந்த 2024ம் ஆண்டு தவெகவில் இணைந்தார். இவர் வேட்பாளராக அறிவிப்பக்கப்பட்டது தவெகவின் மூத்த நிர்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் இவருக்கு வேதாரண்யம் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. கீழ்வேளூர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதால் மற்ற தொகுதியில் இருந்து வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடுவதை கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை. கீழ்வேளூர் தொகுதிக்கு செந்தில்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திருவாரூர் மாவட்டம் தாழைக்குடி பகுதியை சேர்ந்தவர்.
காங்கிரஸ் கட்சியில் மாநிலச்செயலாளராக இருந்த இவர், கடந்த 2014 நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் தவெகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் சீதாநகர் பகுதியை சேர்ந்த கவுரி சித்ரா, அதிமுக மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளராக இருந்து வந்தார்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். எப்படியும் சீட் கிடைக்கும் என்ற ஆசையில் கவுரி சித்ரா இருந்த வந்த நிலையில், அதிமுக சார்பில் சத்தியபாமா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த கவுரி சித்ரா நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு சென்று நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்நிலையில் தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளராக நேற்று கவுரி சித்ரா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இது தவெகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ரசிகர் மன்றம் தொடங்கியதில் இருந்து ஏராளமானோர் இருக்கின்ற நிலையில், மாற்று கட்சியில் இருந்து வந்தவருக்கு அடுத்த நாளே சீட் கொடுப்பதா என கட்சி தலைமை மீது தவெகவினர் கொதிப்பில் உள்ளனர்.
* கோவையில் களமிறங்கும் ‘லவ் ஸ்பெசலிஸ்ட்’
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். ஜோதிடராக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். 628 பதிவுகளை போட்டுள்ளார். அவர் புரோபைலில் தமிழ்நாட்டிலேயே சிறந்த, பிரபல ஜோதிடர், வாஸ்து எக்ஸ்பெர்ட் என தனக்கு தானே தம்பட்டம் அடித்துள்ளார். இவர், ஜோதிடம் மூலம் கேன்சரை தீர்க்கலாம் என்று பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதையெல்லாம் விட லவ் ஸ்பெசலிஸ்ட் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த பலர் ரசனையான கமெண்டுகளை அடுக்கி உள்ளனர். தவெகவில் பெண் உரிமை மதிக்கப்படுவதில்லை என சர்ச்சை தொடர்ந்து வரும் வேளையில், நடிகர் விஜய்க்காக புள்ள குட்டி, புருஷனை கூட விட்டு வருவேன் என சில பெண்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தது பேசு பொருளானது. தற்போது பெண் வேட்பாளர் ஒருவர் ‘லவ் ஸ்பெசலிஸ்ட்’ என கூறி வருவது, இவர் ஜோடிகளை சேர்த்து வைப்பாரா, பிரித்து வைப்பாரா? என எதிர் கேள்விகளை கேட்டு, சிலர் இது எங்கே போய் முடியுமோ? என தலையில் அடித்து கொள்கின்றனர்.
* விஜய் அறிவித்தது வேறு வேட்பாளர்…போட்டியிடுறது வேறு வேட்பாளர்…
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்கு தவெக திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் என்பவரை வேட்பாளராக விஜய் அறிவித்திருந்தார். இவர் அறிவித்த சிறிது நேரத்திலே கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட தவெக நிர்வாகிகள், கிருஷ்ணராயபுரம் தனித்தொகுதி வேட்பாளராக சத்யா மனோகரன் என்பவரின் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்திருந்தனர்.
இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் நிர்வாகிகள் கூறுகையில், ‘கிருஷ்ணராயபுரம் தொகுதி வேட்பாளர் பெயர் விஜய் அறிவித்ததில் குளறுபடி ஆகியுள்ளது. இதில் வேட்பாளரின் பெயர் மதன் கிடையாது. அதற்கு பதிலாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஆர்.புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த சத்யா மனோகரன் தான் வேட்பாளர்’ என்றனர்.
* பாலியல் புகாரில் சிக்கிய நாமக்கல் மாஜி மாவட்ட செயலாளர் மகளுக்கு அவிநாசியில் சீட்
தவெகவின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன். இவர் சமீபத்தில் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் தவெக மகளிரணி பெண் நிர்வாகி ஒருவர் வீட்டில் தங்கினார். அப்போது பாலியல் ரீதியாக அவர் அத்துமீறியதாகவும், அக்கம்பக்கத்தினர் இருவரையும் கண்டித்தது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகியது.
இதுபோல் பதவி வாங்கி தருவதாகக்கூறி பல பெண்களிடம் இது போன்று பாலியல் அத்துமீறலில் செந்தில்நாதன் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. அவரை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்காலிகமாக நீக்கினார். இந்த நிலையில் நாமக்கல் ராசிபுரத்தில் இவரது மகளான கமலிக்கு சீட் கொடுக்க தவெக திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த சம்பவத்தின் காரணமாக தொகுதியை மாற்றி அறிவித்துள்ளனர். அதன்படி கமலி திருப்பூர் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுவார் என்று நடிகர் விஜய் அறிவித்தார்.
* அஜிதா ஆதரவாளர்கள் அதிருப்தி கட்சி கொடியை கழற்றி எரித்தனர்
தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக சென்னையை சேர்ந்தவரும், தனது நண்பரும், நடிகர் மற்றும் இயக்குநருமான ஸ்ரீநாத் (52) என்பவரை விஜய் அறிவித்து உள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்டின் சகோதரி மகன் என்பதும், நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீநாத் வேட்பாளாக அறிவிக்கப்பட்டதற்கு தூத்துக்குடியை சேர்ந்த பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, தவெக மாவட்ட செயலாளர் கனவில் செயல்பட்டு வந்த அஜிதா ஆக்னல், ஏற்கனவே மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் பனையூர் சென்று விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினார். இதேபோன்று கிஷோர், கோல்டன் போன்றவர்களும் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று செலவு செய்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அஜிதா ஆக்னல், கிஷோர், மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர்.சாமுவேல்ராஜ் ஆகியோர் இருந்து வந்தனர்.
ஆனால் இவர்களை புறந்தள்ளிவிட்டு விஜய் தனது நண்பரையே சென்னையில் இருந்து தூத்துக்குடி வேட்பாளராக அறிவித்துள்ளார். இதையடுத்து அஜிதா ஆக்னல் ஆதரவாளர்கள் தங்கள் காரில் இருந்து கட்சி கொடிகளை கழற்றி வீசினர். சிலர் தவெக கொடியை தீயிட்டு எரித்தனர். மேலும், வீடுகளின் கதவுகள் மற்றும் முன்புற சுவர்களில் ஒட்டியிருந்த தவெக ஆதரவு ஸ்டிக்கர்களை கிழித்தெறிந்தனர். விசிலை வீசி எறிந்தனர். மேலும் அஜிதா ஆக்னலுடன் ஆலோசனை நடத்திய பின்பு கட்சியில் இருந்து கூண்டோடு விலகி மாற்றுக்கட்சியில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.
* முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் ராசிபுரத்தில் போட்டி
நாமக்கல் மாவட்ட அதிமுகவில், ராசிபுரம் தொகுதியை மாஜி அமைச்சர் தங்கமணி கைகாட்டுபவர்களே வேட்பாளராக அறிவிக்கும் நிலை இருந்தது. இத்தொகுதியில் அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. 2011ல் தனி தொகுதியாக மாற்றப்பட்ட ராசிபுரத்தில், முதன் முதலில் போட்டியிட்ட தனபால், வெற்றி வாகை சூடியதோடு மட்டுமல்லாமல் ஜெயலலிதா அமைச்சரவையில் சபாநாயகர் ஆகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கப்பட்டு, ராசிபுரம் தொகுதி சரோஜாவிற்கு ஒதுக்கப்பட்டது.
அவரும் வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்றார். தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சபாநாயகராக இருந்த தனபால், மீண்டும் தனக்கு சீட்டு வேண்டும். அல்லது நன்கு படித்த அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியில் இருந்த தனது மகனுக்கு சீட்டு வேண்டுமென தீவிரமாக காய் நகர்த்தி வந்தார். ஆனால், தங்களது குடும்பத்திற்கு சீட்டு இல்லை என்று தெரிந்து கொண்ட சபாநாயகர் தனபால், தனது மகனை நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தவெகவுக்கு அனுப்பி வைத்து விட்டார். உடனடியாக அவரை ராசிபுரம் தொகுதி வேட்பாளராக விஜய் அறிவித்துள்ளார்.
* மருத்துவம் படிக்காதவரை டாக்டர் என விஜய் அறிமுகம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான வேட்பாளரை விஜய் அறிவிக்கும் போது, டாக்டர் ராஜ்குமார் என அறிவித்தார். ஆனால் அந்த வேட்பாளர் மருத்துவம் படிக்கவில்லை, டிப்ளமோ தான் படித்துள்ளார். ஆனால் அவரை ஏன் டாக்டர் என்று அறிமுகப்படுத்தினார் என்று குறிஞ்சிப்பாடி மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மருத்துவம் படிக்காத ஒருவரை டாக்டர் என அறிமுகப்படுத்தி இருப்பது குறிஞ்சிப்பாடி தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
* பெண் நிர்வாகிகளை ‘பாடி ஷேமிங்’ செய்தவர், பல லட்சம் பறித்தவர் மதுரை மாவட்ட செயலாளர்களுக்கு சீட்
தவெகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளராக கல்லாணை உள்ளார். இவர் பெண் தொண்டர்களை ‘பாடி ஷேமிங்’ செய்யும் வகையில் கேலி செய்து பேசியது, தங்கள் பகுதியில் உள்ள மக்கள் பிரச்னைகளை சொன்னால், ‘எப்போதும் பிரச்னைகளோடு வருகிறீர்கள்’ என கேலி செய்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்கையானது.
கைது நடவடிக்கைக்கு பயந்து மக்களுக்கான பிரச்னை தொடர்பாக எந்தவித போராட்டத்தையும் கட்சி சார்பில் நடத்துவதில்லை. கட்சி சார்பில் அச்சிடும் அனைத்து போஸ்டர்களிலும் தனது படம் கட்டாயம் இடம்பெற தொண்டர்களை மிரட்டி வருகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை, கல்லாணை மீது மதுரை தவெக பெண் நிர்வாகி மற்றும் கட்சியினர் சிலர் எழுப்பியிருந்தனர். மேலும், மாவட்ட செயலாளருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு பதவியை தருகிறார். விஜய்க்காக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் ஒதுக்கி வைக்கிறார் என பெண் நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த சூழலில் பாடி ஷேமிங் புகாரில் சிக்கிய மாவட்ட செயலாளர் கல்லாணைக்கு, மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட விஜய் சீட் வழங்கி உள்ளார். இதை பார்த்த தவெக பெண் நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல், தன்னிடம் பல லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதுடன், பதவியை பறித்துக் கொண்டதாக மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் தங்கப்பாண்டி மீது தவெகவின் மதுரை தெற்கு மாவட்ட பெண் நிர்வாகி புகார் தெரிவித்திருந்தார். மேலும், தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி, தற்கொலைக்கு முயன்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் பாலாஜி என்பவரும் புகார் செய்திருந்தார். தற்போது தங்கப்பாண்டி தவெக மதுரை மேற்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
