மும்பை: நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி, ஹைதராபாத் நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை வெறும் 15.4 ஓவர்களிலேயே கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த உற்சாகமான தொடக்கத்தைத் தொடர்ந்து, இன்று ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அஜிங்க்யா ராஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் காண்கின்றன. 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு கோப்பை வெல்லாத ஏக்கத்தைத் தீர்க்க மும்பை துடிப்பது ஒருபுறம் இருக்க, கடந்த சீசனில் அடைந்த பின்னடைவில் இருந்து மீண்டு வர கொல்கத்தா அணி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சமபலத்துடன் காணப்படுகிறது. ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், குயிண்டன் டி காக் மற்றும் திலக் வர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ட்ரெண்ட் போல்ட் போன்ற மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்களும் அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளனர். மிட்செல் சான்ட்னர் மற்றும் மயங்க் மார்க்கண்டே ஆகியோரின் சுழல் கூட்டணி எதிரணியைக் கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்குக் கூடுதல் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஃபின் அலன், டிம் சைபர்ட் மற்றும் அதிரடி வீரர் ரிங்கு சிங் என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. சுழற்பந்து வீச்சில் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி கூட்டணி மிரட்டலாக இருந்தாலும், வேகப்பந்து வீச்சு அந்த அணிக்குச் சற்று சவாலாகவே தெரிகிறது. பிளெஸ்ஸிங் முஸராபானி தவிர்த்து கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா போன்ற இளம் பந்துவீச்சாளர்களையே கேகேஆர் நம்பியுள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தாவின் பேட்டிங்கிற்கும் மும்பையின் வேகப்பந்து வீச்சிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
