கோவை, மார்ச் 27: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் புகார்களை பெற கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டது. இதில் 10 சட்டமன்ற தொகுதிகள் கண்காணிக்கப்படுகிறது. பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படைகளை கண்டறிய ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பிரிவும் துவக்கப்பட்டது. தினமும், ஒவ்வொரு வாகனமும் எந்த ஏரியா வழியாக சென்று வருகிறது என இதில் கண்காணிக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறையில் 1950, 1800 425 0086 என்ற இலவச தொடர்பு எண், 0422 2300156, 0422 2300157 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷனின் சி விஜில் என்ற செயலி மூலமாக புகார்கள் பெறப்பட்டு வருகிறது. நேற்று வரை தொலைபேசி மூலமாக 160 புகார் பெறப்பட்டது. பணம் கொடுத்து ஓட்டு கேட்டதாக 10 புகார்களும், பரிசு பொருட்கள் தொடர்பாக 28 புகார்களும் பதிவானது.
ஓட்டுக்கு இப்போது அட்வான்ஸ் தருகிறோம், ஓட்டு பதிவுக்கு முந்தைய நாள் பணம் தருவோம், இப்போதை செலவுக்கு வைத்து கொள்ளுங்கள் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் புகார்கள் வந்துள்ளது. பரிசு பொருட்கள் தொடர்பாக கோவை தெற்கு தொகுதியில் அதிக புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
