நாகர்கோவில்: தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை செய்து வருகிறது. நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சுங்கான்கடை பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாகச் சென்று வர ஏதுவாக புதிய சாய்வுதளங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், தெங்கம்புதூர் பகுதியில் உள்ள மையங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் தேர்தல் பணிகள் வேகம் எடுத்துள்ளன. கோதநல்லூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் சுகாதார நலன் கருதி புதிய கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
மேலும், கல்லுக்கூட்டம் பகுதியில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிகளில் சிதிலமடைந்த தரைத்தளங்கள் சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அடிப்படை வசதிகள் கட்டாயம் இருப்பதை மாவட்ட தேர்தல் பிரிவு உறுதி செய்து வருகிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, போதுமான காற்றோட்டம் மற்றும் மின்விளக்கு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதி, கோடை காலத்தை முன்னிட்டு நிழற்குடைகள் அமைத்தல் அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் நடைபெறும் இந்தப் பணிகளை வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்பாகவே அனைத்து மையங்களிலும் 100 சதவீத வசதிகளும் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்பாடுகள் மூலம் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் போது அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகள் தடையின்றி கிடைப்பதுடன், ஜனநாயகக் கடமையையாற்ற வரும் பொதுமக்களுக்கு இது பெரும் ஊக்கமளிப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
