சென்னை: சென்னையில் பறக்கும் படை நடத்திய சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையில் தீவிர சோதனை நடத்தி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000 மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000 மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம், 48 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் வீதம், 48 நிலையான கண்காணிப்பு குழுக்களும் 3 சுழற்சி முறைகளில் பணிகளை மேற்கொள்கின்றனர். இக்குழுக்கள் தேர்தல் விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை கண்காணித்து அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.1,73,500, வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் ரூ.62,600 என மொத்தம் ரூ.2,36,100 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
* கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்டபோது ரூ.1.73 லட்சம் இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, மாதவரம் நடேசன் நகரைச் சேர்ந்த பவன் குமார் என்பதும், உரிய ஆவணமின்றி பணம் கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1.73 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
