ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளிக்க சென்ற 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் திரு.வி.க. நகரை சேர்ந்தவர்கள் செல்வம் மகன் பார்த்திபன்(13), சரவணன் மகன் நித்திஷ்(14), கமலகண்ணன் மகன் நித்திஷ்(13). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். பார்த்திபன் பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் 7ம் வகுப்பும், சரவணன் மகன் நித்திஷ், கமலகண்ணன் மகன் நித்திஷ் இருவரும் சிப்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 8, 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில் தற்போது 10ம் வகுப்பு பொதுதேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்த்திபன் உள்ளிட்ட 3 பேரும் நேற்று காலை அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்க சென்றனர்.
ஆனால் 3 பேருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர். தம்பியை காணாமல் தேடிச்சென்ற நித்திஷின் அண்ணன், ஏரிக்கரையில் மாணவர்கள் அணிந்திருந்த துணிகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் ஏரியில் இறங்கி தேடினர். பின்னர் மாணவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, 3 பேரும் உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
