இம்பால்: மணிப்பூரில் காங்கிரஸ் தொழிலாளர் துறை தலைவர் வீட்டின் முன் குண்டுவெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூர் மாநிலம் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் காங்கிரசின் தொழிலாளர் துறை தலைவர் தோய்ஜாம் லோகேந்திரோ. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் இவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் நேற்று காலை காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தோய்ஜாம் லோகேந்திரோ வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். தொடர்ந்து குண்டுவெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
