×

பங்குனி உத்திர திருவிழாவிற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: இன்று கொடியேற்றம்

 

திருவனந்தபுரம்: சபரிமலையில் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா இன்று (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி நடையை திறந்தார். அதைத்தொடர்ந்து நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் தொடங்கும். காலை 11.30 மணிக்கும் நண்பகல் 12க்கும் இடையே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் திருவிழா கொடி ஏற்றுவார்.

நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை உச்சிகால பூஜைக்கு பிறகு உற்சவ பலியும், இரவு பூஜைக்கு பிறகு பூதபலியும் நடைபெறும். இவை இரண்டும் தான் திருவிழா நாட்களில் நடைபெறும் முக்கிய பூஜைகள் ஆகும். திருவிழா 9ம் நாளான மார்ச் 31ம் தேதி சரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். மறுநாள் (ஏப்ரல் 1ம் தேதி) பிரசித்தி பெற்ற ஆறாட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதை முன்னிட்டு காலை 9 மணியளவில் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு ஆறாட்டு ஊர்வலம் புறப்படும். அதைத்தொடர்ந்து பம்பையில் உள்ள குளத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு நடைபெறும். இதன் பிறகு மாலையில் திருவிழா கொடி இறக்கப்படும். அன்றுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவடையும். ஏப்ரல் 1ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

 

Tags : Sabarimala ,Ayyappa ,temple ,Panguni Uthira festival ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappa temple ,
× RELATED மேற்கு ஆசியா போர் எதிரொலி எரிபொருள்,...