×

பாஜவில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதால் கடும் அதிருப்தி சரத்குமார் புதிய கட்சி தொடங்க திட்டமா?: ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனை புதிய அறிவிப்பு வெளியிட முடிவு

 

சென்னை: ஒரே நாள் இரவில் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜவில் இணைத்த சரத்குமாருக்கு எந்த பதவியும் வழங்காமல் தொடர்ந்து ஓரம்கட்டி வருவது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனால் புதிய கட்சியை தொடங்குவது குறித்து இன்று சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் கட்சி தொடங்கி தடம் பதிப்பது ஒன்றும் புதிய விஷயமல்ல, அந்த வரிசையில் நடிகர் சரத்குமார் தனது ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தொடக்க காலத்தில் திமுகவில் பயணித்த அவர், பின்னர் சொந்தக் கட்சியைத் தொடங்கி அரசியலில் ஒரு தனி இடத்தைப் பிடிக்க முயன்றும் அது முடியவில்லை. ஆரம்பத்தில் தனியாக போட்டியிட்ட அவர், கடந்த 2011ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைத்து தென்காசி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கும் சரத்குமார் நுழைந்தார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாகவே அமைந்தது. ஆனால் 2016 தேர்தலில் மீண்டும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்குத் தோல்வியே மிஞ்சியது. அதன்பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களால் சமகவின் செல்வாக்கு சற்று குறையத் தொடங்கியது.

அதன் பின்னர் அரசியலில் பெரிதாக சாதிக்க முடியாமல் திண்டாடிய சரத்குமார், யாரும் எதிர்பாராத திருப்பமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் எழுந்த யோசனையால், மனைவி ராதிகாவை எழுப்பி கருத்து கேட்டார். அதன்பின்னர், சமத்துவ மக்கள் கட்சியை பாஜவோடு இணைப்பதாக சரத்குமார் அறிவித்தார். இந்த இணைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தேசிய கட்சியில் உரிய அங்கீகாரமும், முக்கிய பொறுப்புகளும் கிடைக்கும் என்று அவர் பெரிதும் நம்பினார். பாஜவில் இணைந்த பிறகு சரத்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்படுவதாக பேச்சு எழுந்துள்ளது. அதன்படியே, அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் எதிர்பார்த்த எந்தவொரு முக்கியத்துவமும் அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் வெடித்து கிளம்பி உள்ளது. தனக்கும், தன்னை நம்பி வந்த நிர்வாகிகளுக்கும் பாஜவில் முக்கிய பொறுப்புகள் வழங்காததால் சரத்குமார் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது பழைய சமக நிர்வாகிகளும், தொண்டர்களும் வேறு கட்சிக்கு செல்லலாம் என அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சரத்குமார் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2 ஆண்டுகளாக எந்தவிதப் பொறுப்புகளும் வழங்கப்படாத நிலையிலும், தனது தொண்டர்கள் சோர்வடையாமல் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிட்டுள்ளார். அதாவது ‘‘பொறுத்தார் பூமியாழ்வார்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ள அவர், அங்கீகாரம் கிடைக்காதது குறித்த தனது வருத்தத்தை மறைமுகமாகவும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருப்பது, பாஜவில் நீடிப்பாரா அல்லது புதிய முடிவை எடுப்பாரா என்ற கேள்வியை சமக தொண்டர்களிடம் எழுப்பியுள்ளது. இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருப்பதும், அடுத்த கட்டத்தில் புதிய அரசியல் முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மீண்டும் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் சரத்குமார் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இதனால் புதிய கட்சிக்கான அறிவிப்பை சரத்குமார் வெளியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜவில் இருந்த விலகி அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து சரத்குமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதனால் புதிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : Sarathkumar ,BJP ,Chennai ,Samathuva Makkal Katchi ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...