×

தமிழகம் முழுவதும் ரம்ஜான் கோலாகல கொண்டாட்டம்: சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

 

சென்னை: தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மார்க்கத்தில் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின் போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றி வருகின்றனர். அதன்படி ரமலான் நோன்பு கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் பிறை எங்கும் தென்படவில்லை. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையக தலைமை காஜி தாவூத் கைசர் ஆகியோர் அறிவித்தனர்.
அதன்படி ரம்ஜான் பண்டிகை நேற்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து உற்றார் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டி அணைத்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். ஏழை எளிய மக்கள் மற்றும் நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர். மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் இஸ்லாமியர்கள் வழங்கினர்.

ரம்ஜானை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பெருநாள் உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெரு, பின்னி கார் பார்க்கிங் திடலில் நடந்த தொழுகையில் மாநில தலைவர் ஆர்.அப்துல் கரீம் கலந்துகொண்டு குத்பா உரை ஆற்றினார்.
இதுபோன்று சென்னை மண்டலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பாக திடல்களில் பெருநாள் தொழுகை நடந்தது. சென்னை மயிலாப்பூர் ஜிம்மா மஸ்ஜித்தில் நடந்த சிறப்பு தொழுகையில் இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் கலந்து கொண்டார்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஹஜ் 2026ஐ பொறுத்தவரை சிறப்பாக வழக்கம் போல் எந்த போர் பதற்றமும் இல்லாமல் நடைபெறும். முதல் விமானம் டெல்லியில் இருந்து ஏப்ரல் 18ம் தேதி புறப்படும். 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை அமலில் உள்ளது. அங்குள்ளவர்கள் தேர்தல் அலுவலர்கள் மூலமாக அனுமதி பெற்று வழக்கம் போல் ஹஜ் யாத்திரி செய்வார்கள். அது மட்டுமல்லாமல் பிற மாநிலங்கள் அனைத்தும் சிறப்பாக பயணிகள் புறப்படுவார்கள். புலம் பெயர்ந்த இந்திய தொழிலாளர்கள் அரபு நாட்டில் இருந்து இங்கு ரம்ஜான் பண்டிகை கொண்டாட வந்துள்ளார்கள். அனைவரும் ரம்ஜானை முடித்து விட்டு தங்கள் வேலைக்கு அரபு நாடுகளுக்கு செல்ல நாம் நம்பிக்கையுரியவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எந்த தங்கு தடையின்றி அரபுநாடுகளில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். மேலும் சென்னை தீவுத்திடலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருவல்லிக்கேணி, பெரியமேடு, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, ஆயிரம்விளக்கு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். தொழுகையை நிறைவு செய்து விட்டு வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கு புத்தாடை, உணவு பொட்டலங்கள், பணம் உள்ளிட்டவற்றை தானமாக வழங்கினர்.

 

Tags : Ramzan ,Tamil Nadu ,Chennai ,Islam ,Ramadan ,
× RELATED அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலையில்...