- மின்னணு வாக்குப்பதிவு இயந்திர
- VVPAT
- அசாம்
- கேரளா
- புதுச்சேரி
- புது தில்லி
- தேர்தல் ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள அசாம், கேரளா, புதுச்சேரிக்கான இவிஎம், விவிபேட்களின் முதற்கட்ட ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுதேர்தல் மற்றும் 6 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த 15ம் தேதி வௌியிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ம் தேதியும், கேரளா, அசாம், புதுச்சேரி பேரவைகளுக்கு ஏப்ரல் 9ம் தேதியும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(இவிஎம்) இரண்டு கட்டங்களாக குலுக்கல் ஒதுக்கீட்டு முறையில் அநதந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இதில், முதல்கட்டத்தில் மாவட்ட அளவிலான கிடங்குகளில் இருந்து பேரவை தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம்கட்டத்தில், பேரவை தொகுதி நிலையிலிருந்து வாக்குச்சாவடி நிலைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள், முதல்நிலை சோதனையில் தேர்ச்சி பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதலாவது குலுக்கல் ஒதுக்கீட்டை முடிக்க வேண்டும். அதன்படி, வரும் ஏப்ரல் 9ம் ேததி பேரவை தேர்தல் நடைபெற உள்ள கேரளா, அசாம் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் பொதுதேர்தல்களுக்கும், அத்துடன் கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்கட்ட குலுக்கல் ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது. தேசிய, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர்களால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்பு மூலம் முதல்கட்ட சமவாய்ப்பு முறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.
தொகுதி வாரியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இவிஎம்கள், விவிபேட்(வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் ஆகியவற்றின் பட்டியலை அனைத்து தேசிய, மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அவர்களது மாவட்ட தலைமையகங்களில் பகிரப்பட்டுள்ளன. இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், வாக்குப்பதிவு சரி பார்ப்பு இயந்திரங்களும் தேசிய, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த பேரவை தொகுதியின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல், இரண்டாம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவு சரி பார்ப்பு கருவிகள் ஆகியவற்றின் பட்டியல், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.
