சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அடம்பிடித்த எம்பிக்கள் மனமாற்றம்: காங்கிரசில் புயல் ஓய்ந்தது

 

திருவனந்தபுரம்: சட்டப்பேரவை தேர்தலில் சீட் தந்தே ஆக வேண்டும் என்று முரண்டு பிடித்து வந்த காங்கிரஸ் எம்பிக்களான சுதாகரன் மற்றும் அடூர் பிரகாஷ் ஆகியோர் கடைசியில் காங்கிரஸ் தலைமைக்கு அடிபணிந்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே இம்முறை எந்த எம்பிக்கும் சீட் கிடையாது என்று காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. ஆனால் அதெல்லாம் எனக்கு கவலை இல்லை. கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் நான் போட்டியிடுவது 110 சதவீதம் உறுதி என்று இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநில தலைவருமான சுதாகரன் கூறினார்.

இது கேரள காங்கிரஸ் கட்சியில் கடும் நெருக்கடியை உருவாக்கியது. சுதாகரனின் இந்த தடாலடியை தொடர்ந்து தனக்கும் சீட் வேண்டும் என்று கேட்டு ஆற்றிங்கல் தொகுதி எம்பியான அடூர் பிரகாசும் போர்க்கொடி தூக்கினார். அடூர் பிரகாஷை விட சுதாகரனுக்கு கண்ணூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம் என்பதால் சுதாகரனின் பிரச்னையை எப்படியாவது தீர்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டது. எனக்கு சீட் தராவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று சுதாகரன் எச்சரிக்கவும் தொடங்கினார்.

தொடர்ந்து 10 வருடங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து வெறுத்து போன காங்கிரசுக்கு இம்முறை எப்படியாவது கேரளாவில் ஆட்சியை பிடித்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே எந்த காரணம் கொண்டும் சுதாகரனை காங்கிரசால் கைவிட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ராகுல் காந்தியின் உத்தரவின்பேரில் சுதாகரன் 2 முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் முதலில் எதற்குமே சுதாகரன் மசியவில்லை. கடைசியில் டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தான் போட்டியிலிருந்து விலக அவர் சம்மதித்தார்.

இதன்பிறகு கண்ணூர் திரும்பிய சுதாகரன், எனக்கு கட்சி தான் முக்கியம், வேறு எதுவும் எனக்கு தேவையில்லை என்று கூறினார். இதன் பிறகு தான் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். இந்த பிரச்னை முடியும் வரை கண்ணூர் தொகுதியில் வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்காமல் இருந்தது. சுதாகரன் தன்னுடைய பிடிவாதத்தை கைவிட்டதை தொடர்ந்து கண்ணூர் தொகுதி வேட்பாளராக மோகனன் என்பவரை காங்கிரஸ் நேற்று அறிவித்தார். இவர் கண்ணூரில் உள்ள சுதாகரனின் வீட்டுக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். மோகனனை ஆதரித்து பிரசாரம் செய்ய வருவதாக சுதாகரன் அவரிடம் வாக்குறுதியும் அளித்துள்ளார்.

Related Stories: