ரஷ்யாவைத் தொடர்ந்து ஈரானின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தற்காலிக விலக்கு: இந்திய நிறுவனங்கள் வாங்க திட்டம்

 

புதுடெல்லி: ஈரானின் கச்சா எண்ணெய்க்கு ஒரு மாதத்திற்கு தடை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஈரான் எண்ணெயை வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேற்கு ஆசியா போராலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருப்பதாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள் மீது ஈரானும், அமெரிக்க, இஸ்ரேலிய படைகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70 டாலரில் இருந்து 119.50 டாலர் வரையிலும் அதிகரித்தது. இந்நிலையில், சர்வதேச அளவில் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த ஈரான் கச்சா எண்ணெய் மீதான பொருளாதார தடையை ஒரு மாதத்திற்கு விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கருவூல அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தனது எக்ஸ் பதிவில், ‘‘ஏற்கனவே கடலில் கப்பலில் உள்ள ஈரான் கச்சா எண்ணெய்க்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வரையிலும் ஒரு மாதத்திற்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 14 கோடி பேரல் கச்சா எண்ணெயை வாங்க முடியும்.

இந்த விலக்கு கடலில் உள்ள ஈரான் எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும். மற்றபடி ஈரான் எண்ணெயின் புதிய விற்பனை மற்றும் உற்பத்திக்கான தடை வழக்கம் போல் தொடரும்’’ என கூறி உள்ளார். இப்போரின் தொடக்கத்தில் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாள் அனுமதியை அமெரிக்கா வழங்கியது. அதனால் ரஷ்ய எண்ணெயை வாங்கி வரும் இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இனி ஈரான் கச்சா எண்ணெயை வாங்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் எண்ணெய்க்கான பணத்தை எவ்வாறு வழங்குவது, ஒப்பந்தம் குறித்த சில குழப்பங்கள் இருப்பதால் அமெரிக்க அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்கத்தை எதிர்பார்த்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவைத் தவிர தென் கொரியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளும் ஈரான் எண்ணெய் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: